சமீபத்தில் ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தேன். திருமணத்திற்கு ஊடே LR ஈஸ்வரியின் பாட்டுக்கச்சேரி. இடையில் ஒரு பாடகர் வந்தார் . பலேபாண்டியா ’மாமா - மாப்ளே’ பாடலை இருவராக ஒருவரே இருந்து பாடி அதிசயிக்க வைத்தார் அவர். சிவாஜிக்கு குரல் கொடுத் தடி.எம்.எஸ் ஆகட்டும், எம்.ஆர்.ராதாவுக்கு குரல் கொடுத்த எம்.ராஜ் ஆகட்டும், இருவராகவும் மாறி இவரே பாடியது ஆச்சர்யமூட்டியது. இதுமுடியுமா?
“இருவேறு குரலை
ஒருவர் நகலெடுக்க முடியுமா?”
”அதான் இப்போ
மிமிக்ரியெல்லாம் செய்றாங்களே”
”பாட முடியுமா?”
“முடியும்”எனில் யாரையெல்லாம்
நகலெடுத்து பாட முடியும் என்று இயற்கையின்பால் எழுந்த பெருத்த சந்தேகம்தான் கீழ்வரும்
கட்டுரை எழுத தூண்டியது.
ஒருவர் பாடியது போல சிலாகித்து அப்படியே பாட முடியுமா? முடியும். டி.எம்.எஸ், சீர்காழி, எஸ்.பி.பி, கே.ஜே.ஜேசுதாஸ், பி.பி.ஸ்ரீனிவாஸ் என எந்த ஒரு பாடகரையும்
இமிடேட் செய்து பாட இன்று நிறைய பாடகர்கள் உண்டு. நகலெடுக்க முடியாத பாடகர் யார். முதலில் இருந்து அலசி பார்த்தோமெனில்
தியாகராச பாகவதர், கிட்டப்பாவை
அலேக்காக நம் டி.எம்.எஸ் நகலெடுப்பார். சீர்காழியா?, லோகநாதனா? என இன்றும் குழம்பும் ஆட்கள் உண்டு. பாகவதர் CL.ஜெயராமனை இன்றுஅ னாயசமாக பாடுபவர் உண்டு. கே.பி.சுந்தராம்பாள் அத்தைகயவராய் இருந்தார். எளிதில் இமிடேட் செய்ய முடியாத குரலது. ஆனாலும் சமீப காலங்களில் குத்துப்பாடல்களாய்
அவர் குரல் யாரோ ஒருவர் மூலம் அகோரத்துக்குள்ளாகிறது. “குண்டுமாங்கா” என்று மேற்படி
பாடகர் பாடும் போது நம் வயித்துக்குள் சிறு களங்கல் உண்டாகிறது..
வெண்கலக்குரலோன்
நாகூர் E.M.ஹனீஃபா- வின் குரலை ஒரு திமுக பொதுகூட்டத்தில்
கேட்டேன். ”உடன்பிறப்பே..........................” என ஒரு அவர்
அழைத்து பாடுகிற உச்சஸ்தாதி தொணியை யாரும் ஈடுகட்டமுடியாது. அத்தனை உயரம். பக்கத்திலே ஒருவர் “அவர் அஞ்சுகட்டைக்கும்
மேலபாடுவார்...பழையசரீரம்”... என்றார். இந்த கட்டை அளவும் நம் அறிவும் எட்டாதூரம். ஆனாலும் பெரியவர் ஹனீஃபாவை இமிடேட்
செய்து இன்று கழகத்திற்கு பாடுகிறவர் வந்தும் விட்டார். இறையன்பன் குத்தூஸ்தான் அவர். குத்தூஸ் அவர்கள் ஓரளவு ஹனீபா-வை ஞாபகப்படுத்துகிறார். ஞாபகம்தான். அவ்வளவுதான். ஒரிஜினலை ஞாபகப்படுத்தலாம்தான். அப்படியே ஆகிவிட முடியாது. வெறும் நகலெடுப்புதான்.
சில நேரங்களில் பட்டிகாட்டுத்தனமான, திமிர் நிறைந்த, சில நேரம் கிண்டலும் ,துக்கிரித்தனமும் கொப்பளிக்கிற, அதீத ஏற்ற இறக்கங்கள் நிறைந்த, எதையும் லகுவாக பாடிவிடும் குரல் அது.
நினைத்து பார்த்தால்
நாம் பெரும்பாலும் எஸ்.பி.பி-யை அடிக்கடி மேற்கோள் காட்டி வாசுதேவனை அவ்வப்போது மறந்தும்
போகிறோம். பிரபலமற்ற குரலாக நமக்கு அது அடையாளப்படுத்தபடுகிறது. பட்டிருக்கிறது. அது டி.எம்.எஸ்-யே அடிக்கடி பெருமைப்படுத்தி பி.பி.சீனிவாஸை குறைத்து நினைத்து கொண்டதைப்போல. இது வாசுதேவனையோ,? பி.பி.எஸ்-சையோ? குறைத்து
மதிப்பிடுவதான யாருடைய எண்ணமுமில்லை;
மற்றபடி “நீஎன்ன? பெரிய எஸ்.பி.பியோ?” என சாமான்யனும் எஸ்.பி.பி-யை மேற்கோள்
காட்டுகிற ஒரு தன்மை வாசுதேவனுக்கும், பி.பி.எஸ்க்கும் வாய்த்திடவில்லை என்ற ஆதங்கப்பார்வைதான். ”எஸ்.பி.பி பாடுன பாட்டப் பாடுறாரு” என்பதற்கும் ’மலேசியா வாசுதேவன் பாடுன பாட்ட
பாடுறாரு’ என்பதற்கும் விளக்க முடியாத ஒரு விளம்பர
இடைவெளி இருக்கிறது. ஆனாலும் மலேசியா வாசுதேவன் தனித்துவமானவர். கிராமத்து வாசனை வீசும்
சினிமாப் படம் அது.
பாரதிராஜாவின் படம்தான். ஒரு நடுத்தர வயதுள்ள கதாப்பத்திரம் சோகம்
இழையோட வருந்தி தனது வாழ்க்கையில் இன்பம் வருமா என்ற ஏக்கத்தில் ஒரு பாட்டு பாடுவார்…….
”பூங்காற்று திரும்புமா?
எம்பாட்ட விரும்புமா?”………………
என்று ஒரு குரல் எழும்பும்.
நாம் எத்தனை தடவை கேட்டாலும் நம்மை அமைதிப்படுத்தி,
ஆசுவாசபடுத்தும் பாடல் அது.அந்த பாத்திரத்தில் நடித்தவர் ஒருமிகப் பெரிய நடிகர்.கீழ்திசையின்
மார்லின் பிரான்டோ அன அழைக்கப் பட்டவர்.நம் நடிகர் திலகம்தான்.அச்சோகப் பாடலில் அவர்
குரலுக்கு குரல் கொடுத்தவர் மலேசியா வாசுதேவன் என்ற அற்புத கலைஞர்.அப்படம் வெளிவந்த
புதிதில் அப்படப் பாடல்களை டி.எம்.எஸ்-தான் பாடியிருப்பார் என்று எனக்கு மட்டுமல்ல
எல்லோருக்கும் சந்தேகம்தான்.
எனக்கு ஏன் சந்தேகம்? எனக்கு என்ன வயது அப்போது?..........ஏழு
வயது.. இரண்டாவது படித்து கொண்டிருந்தேன்.1985ம்
வருடம். டி.எம்.எஸ் குரலென்றால் பழைய படமாகத்தான் இருக்கும் என நானாக யூகித்து கொண்டேன்….
ஒரு மழை நாள் மாலையில் என் அப்பா தன் சைக்கிளில் என்னையும் என் தம்பியையும் இருத்திகொண்டு
மதுரை குரு தியேட்டரில் இப்படத்தை பார்க்க வலுக்கட்டாயமாக அழைத்து அழுத்திசென்றதாலும்,
நான் பழைய படமெனில் வரமாட்டேன் என்று சொன்னதாலும், என் அப்பாவுக்கு அது யார் குரலென
அப்போது தெரியாததால் என்னை கன்வின்ஸ் செய்து அழைத்து செல்லாமல் இழுத்து சென்றதாலும்,
சரி! அப்பாவைப்போல் ஊருக்கே அது அப்போதைக்கு தெரியாமல்தான் இருந்திருக்கும் என நான்
இப்போது யூகித்து எழுதுகிறேன்.என்ன படம் அது?முதல் மரியாதை.
இளையராஜா தான் முதன் முதலாக இசையமைக்க வாய்ப்பு
கிடைத்த படமான அன்னக்கிளியில் தன் நண்பரான மலேசியா வாசுதேவனுக்கு வாய்ப்பளித்தார்.அதிலிருந்து
தொடர்ந்து ஒவ்வொரு படத்திலும் மலேசியா வாசுதேவன் இளையராஜாவுக்காக பாடினார்.தன் 8 வயதிலேயே
பாட ஆரம்பித்த இவர் தன் முப்பது வருட திரை வாழ்வில் இதுவரை 8000 பாடல்களுக்கும் மேல்
பாடியுள்ளார்.சிவாஜிக்காக அதுவரை பாடிய டி.எம்.எஸ்-க்கு மாற்றாக மலேசியா வாசுதேவனை
கண்டுபிடித்தவர் இளையராஜா.
முதல் மரியாதையில் இசைஞானி இளையராஜா மலேசியா வாசுதேவனை
பாடச் சொல்லி கேட்டு அது சிவாஜிக்கும் பொருந்திப்போக அப்படியே அப்படத்தின் அனைத்து
பாடல்களையும் அவர் பாடியிருப்பார். பாடல்களை கேட்ட நடிகர் திலகம் மலேசியா வாசுதேவனை
கட்டிப்பிடித்து பாராட்டியதாக செய்தி உண்டு.மற்றொருமுறை அதே இளையராஜா அதே சிவாஜிக்கு
”படிக்காதவன்”
படத்தில் “ ஒரு கூட்டுக் கிளியாக”
என்ற பாடலைபாடியிருப்பார். இன்னும்பொருத்தமாய் இருக்கும்.
இளையராஜா வாசுதேவன் கூட்டணி மகத்தானது.அற்புதமான
பாடல்களை இக்கூட்டணி தந்தது.வாசுதேவனை நிறைய மாறுபட்ட பாடல்களை பாடச் சொல்லி இளையராஜா
இவரை ஊக்கப்படித்தியிருக்க வேண்டும்.தொடர்ந்து வேறு வேறான குரல் மாற்றி பாடுவதில் வல்லவர்
இவர் என இளையராஜா சரியாக கண்டுபிடித்திருக்க வேண்டும்.
பின்னொரு தடவை 16 வயதினிலே படத்தில் தனது குரலை
கர்ண கொடூரமாய் மாற்றி”ஆட்டுகுட்டி
முட்டையிட்டு” என
பாடி முடித்த கையோடு இறுதியில் கழுதையாகவும் கணைத்திருப்பார். அவ்வாறெனில் இதே நையாண்டியொடு
“அம்மம்மோய் அப்பப்போய்” எனவும்,
”காதல் வந்துருச்சு”
எனவும் பாடியது இவர்தான் என நாம் நம்ப முடியும். ஆனால் அவரே “கோடை கால காற்றே”
வையும், ”பூங்காற்று
திரும்புமா” வையும்
பாடும்பொழுதுதான் அவர் குரலும் அதன் ஏற்ற இறக்கங்களும் (MODULATIONS)
நமக்கு பெரும் ஆச்சரியமூட்டிவிடும்.
ஒரு ஹீரோவுக்கும் வில்லனுக்கும் இடையேயான சவால்
பாட்டு.பொதுவாக எல்லோரும் ஹீரோ பாடுகிற பகுதிக்குத்தான் விருப்பமாய் இருப்பர்.ஆனால்
இந்த பாடலை நான் ஒவ்வொரு முறை கேட்கிற பொழுதும் அந்த குரல் பணத்திமிரின் அம்சத்தோடும்,
மிடுக்கோடும் எனக்கு கேட்கும்.ரஜினி ஹீரோ, சத்யராஜ் வில்லன்.எஸ்.பி.பி-யும் மலேசியா
வாசுதேவனும் பாடியிருப்பர்.படம் மிஸ்டர் பாரத்.பாடல் “என்னம்மா கண்ணு”.இன்னும்
எத்தனை தடவை கேட்டாலும் அப்பாட்டில் வில்லன் சத்யராஜ்தான் மிடுக்குடன் ஜெயிக்கிறார்.ஏனெனில்
அவருக்கு குரல் கொடுத்தது பிற்காலத்தில் அவரே வில்லனாகவும் அறியப்பட்ட நம் பாடகர்.
அதே குரல் “ஒரு தங்க ரதத்தில்”
தங்கச்சி பாசம் பாடும், “ஆனந்த தேன் சிந்தும்
பூஞ்சோலையில்”காதல்
கவிதை பாடும், பட்டிக்காட்டில்
”கட்டவண்டி”
ஓட்டும், “கோடை கால காற்றாய்”
சாமரம் வீசும்.
இளையராஜாவுக்கு சவால்கள் நிறைந்த பாடல்களை பாட இவர்தாம்
ஆதர்சம். சகலகலா வல்லவனில் “கட்டவண்டி கட்டவண்டியில்”
இவர் சுதி ஏற்றிஇறக்கும் அழகும், கோழி கூவிது படத்தில் “பூவே…இளைய பூவே”
என சுதியை ஏற்றிமட்டுமே நிறுத்தும் அழகும் கோடி
கொடுத்தாலும் தகும்.
பாலக்காட்டில் மலையாள பெற்றோருக்கு பிறந்த வாசுதேவன்
கடல் கடந்து மலேயாவில் ஒரு தமிழ் நாடக் குழுவில் பாடியும் நடித்தும் வர, சினிமாவில்
நடிக்கிற ஆசையில் சென்னை வந்து இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராசன் நடத்தி வந்த இசைக்குழுவில்
பாடியுள்ளார்.முதன் முதலில் இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் இசையமைத்த பாடலுக்கு பாடியவர் பின்னர் எம்.எஸ்.வி
இசையிலும் பாடியுள்ளார். ஏ.அர்.ரகுமானை 1987ல் ”டிஸ்கோ
டிஸ்கோ” என்ற ஆல்பத்தை
உருவாக்க ஊக்குவித்து உதவியவர் வாசுதேவன். இதை ரகுமான் வாசுதேவனின் இறப்புக்கு பின்
தனது ட்விட்டர் பக்கத்தில் பதிந்தார். ரகுமானுக்கு கிழக்குச்
சீமையிலே, கருத்தம்மா, மின்சாரக் கனவு என குறிப்பிடும்படியான பாடல்களை பாடியிருப்பினும்
ரகுமான் தேர்ந்தெடுத்து கொடுத்த பாடல்கள் வித்தியசமானது. கருத்தம்மாவில் “காடு..பொட்டக்காடு”
இவர் பாடியதுதான்.மின்சாரக் கனவில் ”பூ
பூக்கும் ஓசை”
எனும் பாடலில் இடையில் வரும் ”ஹில்கோரே
ஹில்கோரே” என்ற பிட் வாசுதேவன்
பாடியது.அத்தனி பெரிய கலைஞர் இந்த பிட்டை மட்டும் எப்படி பாடியிருப்பார், அதற்கு எவ்வளவு
சம்பளம் வாங்கியிருப்பார் என்றூ நினைத்து பார்க்கிறேன்.
மலேசியா வாசுதேவனை தமிழ் சினிமா பெற்றது பெரும்
பாக்கியம் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. நம்மூரில் எஸ்.பி.பி, போல் பாடுவதற்கு நிறைய
பின்னணி பாடகர்கள் வந்துவிட்டனர்.எஸ்.பி.பி-யை நகலெடுத்தது போல இருந்தாலும், கொஞ்சம்
கணீர் தன்மை குறைந்துபாடுகிற குரல் மனோவுடையது. ஜேசுதாஸ் தான் உத்தமம் என்று வாதிடுகிறவருக்கு
அங்கு ஜெயச்சந்திரனை கான இயலாது. இதோ உன்னிமேனனும், மது பாலகிருஷ்ணனும், ஜேசுதாஸ் ஜெயச்சந்திரன்
வகையறாக்கள்தான்.சிறு பிசிறெடுத்தாலும் குரல் ஒற்றுமை நிறைய உண்டு.தன் வாரிசான விஜய்
ஜேசுதாசுக்கு ஜேசுதாஸின்குரல் வாய்த்தது பெரிய அதிசயமில்லை. முன்னர் சீர்காழி கோவிந்தராஜனின்
மகன் சிவசிதம்பரத்திரத்திற்கு வாய்த்தது போல. அவரவர் வாரிசுகளுக்கு அது சில நேரம் வந்துவிடுகிறது.அதே
குரல்மற்றவர்க்கும் வாய்க்கிறதையும் நாம் பார்க்கிறோம், கேட்கிறோம்.நாம் கேட்கிற கல்யாண
கச்சேரிகள், நடு இரவு பாட்டுக் கச்சேரிகளில் நகலெடுக்கப்பட்ட டி.எம்.எஸ், எஸ்.பி.பி,
ஜேசுதாஸ் கண்டிப்பாக இருப்பர்.ஆனால் அதிலும் தனித்துவமாக, திகழ்ந்த மலேசியா வாசுதேவனின்
மகனுக்கு கூட அந்த குரல் வசப்படவில்லை.
மறுபடியும் மலேசியா வாசுதேவனை நாம் கேட்க வேண்டுமெனில்
பண்பலையிலும், படிவு செய்யப்பட்ட உபகரணங்களிலும், தொலைக்காட்சியிலும் மட்டுமே கேட்க
முடியும்..ஒருமுறை தொலைகாட்சியில் மலேசியா வாசுதேவனின் மகள் “கோடை கால காற்றே”
பாடினார்.அந்த பாட்டில் மலேசியா வாசுதேவன் தென்பட்டார்.கோடை
கால காற்றாய் அசைந்து வந்து நம் செவிக்கும் லயிக்கிற அவரின் குரலுக்கு சொந்தமான உடல்
இன்று காற்றில் கலந்துவிட்டது.
”நீ என்ன பெரிய
மலேசியா வாசுதேவனா?” என
யாரும் கேட்கப் போவதே இல்லை.ஏனெனில் அவர் தனித்துவமானவர்.