Sunday, 14 October 2012

பாட்டி சுட்ட வடையும் ஏமாந்த நரியும்

நரிக்கூட்டத் தலைவன் பெரிய நரி தமது பாரம்பரியத்தை கெடுத்த நரியை வசைபாடிக்கொண்டு இருந்தது. தங்கள் உணவு கலாச்சாரத்தையே மாற்றும்படியான செய்கையை செய்த நரியினை அதன் அம்மா நரி, அப்பா நரி, தம்பி நரி, பக்கத்து வீட்டு நரி, எதிர்த்த வீட்டு நரி, ஒத்தக்கால் நரி என எல்லோரும் திட்டி தீர்த்தனர்.

எல்லாம் அந்த வடையால் தான் வந்தது. 

“பசிக்கிற வயித்துக்கு எதை தின்னா என்ன? மனசுக்கு பிடிச்சத சாப்பிடக்கூடாதா?  யாருக்கும் தெரியாமல் சாப்பிட்டுருக்கலாம், அந்த மந்திரி நரிப்பயல்தான் வாய்க்குள் வடையை திணிக்கிற கணம் கையும் கவளமுமாக பிடித்து தலைவரிடம் மாட்டி கொடுத்துவிட்டான். என நினைத்து உம்மென அழுதது நரி.

பாவம் அந்த காக்கையாவது நிம்மதியா சாப்பிட்டுருக்கும். அதையும் சாப்பிட விடாம பாட்டு பாடு, குத்தாட்டம் ஆடுன்னு ஏமாத்தி கஷ்டப்பட்டு வடைய லவட்டிகிட்டு வந்தா இவிய்ங்க ரொம்பதான் நாட்டாமை பண்றாங்கஎன புலம்பியது நம்ம நரி..

சரி! நாம் போய் அந்த காக்காகிட்ட மன்னிப்பு கேட்போம்னு முடிவு பண்ணி காக்காவைப் போய் பாத்துச்சு நரி. சோகமா இருந்த காக்காவிடம் போய் மன்னிப்பு கேட்ட நரிகிட்ட காக்கையும் வடையை தான் பாட்டியிடம் இருந்த ஒத்த வடையை திருடுனத சொல்லுச்சு.

இரண்டு பேரும் சேர்ந்து பாட்டியிடம் மன்னிப்பு கேட்க பாட்டி வீட்டிற்கு போனார்கள்..

பாட்டியின் வீட்டருகே சென்றபோது பாட்டி யாரிடமோ பேசி கொண்டிருந்தது கேட்டது. 

பாட்டி ஒரு புது வடையினை எடுத்து எலி பிடிக்கும் பொறிக்குள் புகுத்தி கொண்டிருந்தாள்.

ஏன் பாட்டி இன்னிக்கு வேற வடையை வைக்கிறகேட்டான் பாட்டியின் பேரன்.

“ காலையிலே எலிப்பொறிக்குள் வைக்க வச்சிருந்த பருப்பு வடையை ஒரு காக்கா தூக்கிகிட்டு போயிருச்சுடா பேரா.. அதான் உளுந்தவடையை பொறிக்குள்ளாற வைக்கிறேன்” என்று பாட்டி தன் பேரனிடம் புலம்பியது கேட்டது.

ஆகா! எலியை பிடிக்க வச்சிருந்த விஷ வடையை தானே நாம் திருடினோம், அதை போயி நரி நீயும் அபகரிச்சு தின்னப்போனியே!–னு வருத்தப்பட்டது காக்கை.

நல்ல வேளை மந்திரி நரி மட்டும் வரலைன்னா? நான் அந்த வடையை தின்னு செத்து போயிருப்பேன்.என காக்காவிடம் அழுதது நரி.

அது சரி அந்த வடை எங்கே?என கேட்டது காக்கை.

அதை அப்பவே நான் எறும்பு புத்துக்குள்ளே தூக்கி போட்டுட்டேனே 
என்றது நரி.

வா! நாம் போய் எரும்புகளை காப்பாத்துவோம்.என்று காக்கையும் நரியும் விரைந்தன எறும்பு புற்றை நோக்கி. அங்கே எறும்புகள் தங்கள் புற்றை தண்ணியை ஊத்தி மாப் போட்டு, சோப்பை கொண்டு கைகளை நன்றாக கழுவி கொண்டிருந்தன.

காக்கை மெதுவாக சென்று ஒரு எறும்பிடம் பேச்சு கொடுத்தது.                           
எறும்பண்ணே! என்ன விஷேசம்.? எல்லோரும் சேர்ந்து உங்க வீட்ட சுத்தப்படுத்திகிட்டு இருக்கீங்க..

“எவனோ ஒரு களவானிப்பயல் ஊசிப்போன வடையை எங்க வீட்டுக்குள்ள போட்டுட்டு போயிட்டான். அதை சாப்பிட்டு என் தாத்தா கட்டெறும்புக்கு வயித்தால போயிருச்சு. அதான் மிச்சமிருக்கிற வடையை தூக்கிகிட்டு போயி குப்பைத் தொட்டியில போட்டுட்டு வீட்டைக் கழுவி சுத்தப்படுத்துறோம்எனச் விளக்கம் சொன்னது எறும்பு.

நரி முகத்தை மறைத்துக்கொண்டு, வாயை சுழ்த்து உம்மென வைத்துகொண்டு காக்கையை முறைத்தது.

பிறகு இருவரும் தனிதனியே தம் வீட்டுக்கு சென்றனர்.

கதை சொல்லும் நீதி:
1. அடுத்தவன் வீட்டு முன்னால் மீந்துபோன நம் குப்பையையும், உணவு பண்டங்களையும் போடக்கூடாது.
2. திருடக்கூடாது. அல்லது நமக்கு பயன்படாத பொருளை திருடக்கூடாது; முக்கியமா அடுத்தவர் பொருளை ஏமாற்றி அபகரிக்கக் கூடாது.
  

No comments:

Post a Comment