Wednesday, 14 November 2012

எனது சைக்கிள் வரலாறு



19ம் நூற்றாண்டின் சுவாரசியமான, அதிசயிக்கத்தக்க, எல்லோராலும் விரும்பப்பட்ட ஒரு கண்டுபிடிப்பு சைக்கிள்.

80 கிலோமீட்டர் வேகத்தில் நாம் பல்சரிலும், அபாச்சியிலும் பறக்கையில் சாலை ஓரத்தே சைக்கிளில் செல்கிற ஒருவரை நாம் அதிகம் கண்டுகொள்வதில்லை. கொண்டாலும் பரிதாபமாய் ஒரு பார்வை அவர் மேல் வீசிவிட்டு நாம் பறந்துவிடுகிறோம். வாழ்க்கைத்தரத்தின் அடுக்குகளில் கடைசிக்கு முந்தின அடுக்கின் இன்றைய பரிதாப அடையாளம் சைக்கிள். வாழ்க்கையின் மேலடுக்கு மனிதர்களின் குழந்தைகள் ஓட்டிப் பழகும் பணக்கார சைக்கிள்கள் தனி ரகம். தங்கள் வாழ்க்கையின் பெரும் கனவை சைக்கிள் பயணத்தில் கண்டு களிக்கிற ஏழை நடுத்தர வர்க்க சைக்கிள்கள் மறக்க முடியாதவை.

நகரங்களில் சைக்கிளில் செல்கிற, சைக்கிள் வைத்திருக்கிற மனிதர்கள் இப்போது அறிது. போக்குவரத்து காவலர் இப்போது எந்த சட்டத்தை நிலைநாட்டவும் சைக்கிளை மறித்து நிறுத்துவதில்லை. சிக்னல்கள் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு எப்போதும் திறந்திருக்கின்றன.

என் நினவலைகளை அசை போடுகையில் சைக்கிள்மேல் நான் வைத்திருந்த மரியாதையை என் ஸ்ப்ளெண்டருக்கோ, ஆக்டிவாவிற்கோ, நான் பார்க்கிற பலசருக்கோ  நான் கொடுத்ததில்லை. சைக்கிள் மேல் இருந்த ஒரு ஈர்ப்பு, அந்நியோன்யம், கவர்ச்சி பிற்பாடு நான் வாங்கிய என் இன்னபிற வாகனங்களில் நான் கண்டுகொண்டதில்லை. என் முதல் சைக்கிளானது என் அப்பா இறந்தபின் நான் எடுத்து உபயோகப்படுத்திய சைக்கிள். அந்த சைக்கிள் இப்போது எங்கிருக்கிறதென எனக்கு தெரியவில்லை. அதனை 400 ரூபாய்க்கு சந்தையில் விற்றுவிட்டு வந்து அடுத்தவாரம் அதே கடையில் சென்று பார்த்தபோது ஒரு ஓரமாய் மினுமினுப்போடு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அருகினில் சென்று இருக்கையின் மீதும், கேரியர் மீது கையினால் தடவி கொடுத்தேன். பிறிதொரு வாரம் மறுபடியும் காண நினைத்து அங்கு சென்றபோது அதனை யாரோ வாங்கி சென்றுவிட்டதாக ’காதர் சைக்கிள் பார்ட்ஸ்’ பாய் சொன்னார். என் மனம் ஒருவாரம் பஞ்சர் ஆகி கிடந்தது. அத்தனை துயரம்.

என் அப்பா 1976ல் டிவிஎஸ்-சில் வேலைக்கு சேர்ந்து முதல் சம்பளத்தில் வாங்கிய பொருட்களாவது ரூ.10 கொடுத்து வாங்கிய ஒரு  மர மேஜை, ஒரு டைம்பீஸ் (அதிகாலை 5மணிக்கு எழுப்பி ஃபர்ஸ்ட் ஷிப்ட் செல்வதற்கு எழுப்ப) மற்றும் ஒரு சைக்கிள். தன் சம்பளத்தில் ரூ.140 கொடுத்து வாங்கிய ஹெர்குலிஸ் சைக்கிளின் மேல் அவருக்கு இருந்த காதல் சொல்லி மாளாது. ஒரு சாமான்ய சம்சாரி சைக்கிள் வாங்கியபின் தனது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திகொண்ட காலம் அது.

சைக்கிள் அன்று எல்லோருக்கும் ஒரு கனவு வாகனம். சினிமா கதாநாயகர்கள் சைக்கிளில் சென்று  தங்கள் காதலை ஓவாராய்லிங் செய்து கொண்டிருந்த பொற்காலம்.இன்று ஒரு ஏழை கதாநாயகன் கூட பல்சரில்தான் வந்தால்தான் ய்தார்த்தம் எனப் படுகிறது. அன்று சைக்கிள் தயாரித்த கம்பெனிகள் அதற்கு அட்லஸ் எனவும், , பூமியை தாங்கும் உறுதிகொண்ட ஹெர்குலிஸ் என்றும், வெல்ல முடியாத ஹீரோ என்றும் ஒரு நிஜ ஹீரோவுக்கு வைப்பதுபோல்தான் பெயர் வைத்தன.

கண்படுமே! பிறர் கண்படுமேஎன்று சைக்கிளில் ஜெமினி செய்த காதலையும், சிவாஜி மிதித்து பாடிய வந்தநாள்முதல் இந்த நாள்வரை வாழ்க்கை தத்துவ சைக்கிளையும் தாங்களும் வாங்கி தத்தமது சைக்கிளில் காதல் பாடி வாழ்க்கையை தீர்த்தனர் நமது அநேக அப்பாக்கள்.

பின்னர் வந்த கிராமத்து சைக்கிள் “ஓரம்போஎன்று சொல்லி மதுரை ஜில்லா முழுவதும் சுற்றித் திரிந்தது. வருஷம் 16 கார்த்திக்கையும் குஷ்புவையும் மறந்தாலும் அந்த பிஎஸ்ஏ எஸ்எல்ஆரை யாராலும் மறக்கமுடியாது. கோபுர வாசலிலே ஜனகராஜ் பானுப்பிரியா பேசிய கேசட்டை எடுத்துகொண்டு ஒரு கையால் சைக்கிளை ஓட்டி வருவதையும், பின்னணியில் இசைஞானியின் இசையையும் ரசிக்காத ரசிகன் தமிழ்நாட்டில் இல்லை.

பாலைவனச்சோலை சைக்கிள், பூவே பூச்சுடவா சைக்கிள், ”அண்ணாமலை” சைக்கிள், திருமதி பழனிச்சாமி சைக்கிள், அண்ணா நகர் முதல் தெரு சைக்கிள், அஞ்சலிசைக்கிள் என சைக்கிள் இடம்பெறாத சினிமாக்கள் குறைவு.. இன்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை நாம் சைக்கிளுடைமையின் மூலம் ஆய்வுக்கு உட்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

என்னால் மறக்க முடியாத ஒரு இடம் PSR சைக்கிள் மார்ட்”. ஆண்டாள்புரம் வடக்குத்தெரு காளியம்மன் கோவில் பின்பக்கம் தண்டவாளம் தாண்டி மாநகராட்சி பள்ளி முன் சுப்பிரமணியபுரம் மார்க்கெட் அருகில்  PSR சைக்கிள் மார்ட்இருந்தது.. நான் சைக்கிள் பழகியது இந்த் கடை வாடகை சைக்கிளில்தான். ஒரு மணி நேரத்திற்கு ஒரு ரூபாய் வாடகை. எனக்கு சைக்கிள் பழகி கொடுத்த கார்மேகம் சூர்யா டிரைவிங் ஸ்கூல் வாத்தியாராக உள்ளான்.என்ன ஒரு பொருத்தம் பாருங்கள்?

வாடகை சைக்கிளை எடுத்துகொண்டு  நான், பாலா, சீனி, கோபி விமான நிலையம் செல்வொம்.. விமானம் மேலே எழும்பி வெளியே செல்கிற பகுதிக்கு சென்று நின்றுகொள்வோம். அந்த இடத்திற்கு நிறைய கூட்டம் வரும்.விமானம் பார்க்காத அனைவரும் அந்த இட்த்தில் நின்றுதான் விமான தரிசனம் செய்வர். அன்றைய ஸ்டேட் ஐஸ்-ன் வாகனம் ஒன்று அங்கு எப்போதும் நீக்கமற நின்றிருக்கும். ஆளுக்கொரு பால் ஐஸ்-வாங்கிகொண்டு ஒற்றை கையில் ஹேண்டில் பாரை லாவகமாய் பிடித்துகொண்டு வீடு திரும்புகிற சந்தோஷம் எதற்கும் இணையில்லாதது. அவனியாபுரம், அழகர்கோவில், நாகமலை, திருப்பரங்குன்றம், என சுற்றாத தொலைவில்லை.

என் அப்பா தன் முதல் சைக்கிளை தொலைத்துவிட்டு சுப்ரமணியபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றபோது நானும் உடன் சென்றேன். அவர் முகம் வாடியதை நான் முதன் முதலாக கண்டேன்.
சிகப்பு நிற சீட்டும், பாரின் மீது போர்த்தபட்ட சிகப்பும் கருப்பும் கலந்த கவரும், சில்வர் கலர் கேரியரும், டைனமோ தரும் சக்தியில் ஒளிரும் ஹெட்லைட்டும் எனது மனக்கன்னில் தோன்றி என் வெளிக்கண்ணில் நீராக சொட்டியது அன்று.

“தொலைந்த சைக்கிள்-லாம் கிடைக்காது துரை..எல்லாத்தையும் கழட்டி வித்திடுவாய்ங்க. இந்த போலீஸ் ஸ்டேஷன் புகாரெல்லாம் சும்மா கண்துடைப்பு. வருத்தப்படாதே!.. புதுசா ஒண்ணு வாங்கிக்க..ஷிப்டுக்கு போகனும்ல!என்று அப்பாவிடம் சொன்னார் வரதராஜன் மாமா.

பள்ளி செல்கையில் யார் யாரோ ஓட்டி செல்லும் சிகப்பு நிற ஹெர்குலிஸ் சைக்கிள்கள் எங்கள் சைக்கிள் போலவே கடந்து போகும். அப்பாவிடம் போய் சொல்வேன். அவர் சொல்வதை குறிப்புகளோடு கேட்டுக்கொள்வார். என்னை ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை மேலக்கோபுர விதி நடராஜ் சைக்கிள்ஸ் கடைக்கு அழைத்துப் போனார். புது சைக்கிள் விலை விசாரித்தோம். ரூ.650 என்று சொன்னார்கள். கேரியரும், ஸ்டாண்டும், தனி விலை என்றனர். 

இறுதியில் அப்பா சராசரி சம்சாரி வறுமையிடம் தோற்றுப்போய் ஒரு செகண்ட் ஹேண்ட் பழைய சைக்கிளை வரதராசன் மாமா மூலம் வாங்கி வந்தார்..முன்னதுபோல் பளபளப்பு இல்லையெனினும் பச்சை நிறமாய் அழகாய்த்தான் இருந்தது. பின்னர் இதே சைக்கிள்தான் என் இஷ்ட வாகனாமாயும் ஆகிப்போனது தனிக்கதை.

அப்பாவிடம் ஒவ்வொரு வருடமும் நான் புது சைக்கிள் வாங்கித் தர கேட்டதுண்டு.

“உனக்கு லைசென்ஸ் தரமாட்டாங்கடாஎன்று பொய் சொல்வார்.

உனக்கு கால் எட்டாது.. எட்டட்டும் வாங்கித்தாரேன்”,

 பத்தாவதில் 400 மார்க் எடு! வாங்கித்தாரேன்.

12வது பாஸ் பண்ணு வாங்கித் தாரேன்.போன்ற எண்ணற்ற வாக்குறுதிகள் காலாவதியாகி இறுதியாக அவரின் மரணம் வாய்த்ததினால் எனக்கு அவருடைய சைக்கிள் வாய்த்தது..

அப்போது நான் அவர் வாங்கித் தந்த டிவிஎஸ் வேலையை உதறிவிட்டு ஒரு டீத்தூள் நிறுவனத்தில் டெலிவெரி பாய் ஆக வேலை பார்த்த சமயம். அவரும் பதவி உயர்வில் மேலாலராக உயர்ந்து வீட்டிற்கே வேன் வந்து அவரை அழைத்து போகிற நிலைமையில் என் டெலிவெரி பாய் வேலைக்கு ஒரு சைக்கிள்  தேவைப்பட்டது. காலையில் நான் ஓட்டிக்கொள்ள, மாலையில் அவர் வைத்துக்கொள்வார். சரியாக ஆறு மாதம் கூட இராது. மரணம் அவரை தழுவிக்கொண்டது. சைக்கிள் என் வசமானது.

சைக்கிளுக்கு 1999ம் வருடம் பொங்கலுக்கு புது வண்ணமாய் சிகப்பை அடித்து வெள்ளையில் என் பெயரை பொறித்தேன். ஒரு நாள் என் வாடைகை வீட்டின் கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த என் சைக்கிள் அடுத்த நாள் காலையில் நான் கண் விழித்து பார்த்தபோது இல்லை. எனக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. தெருவெல்லாம் தேடினேன். ஊரெல்லாம் ஓடினேன்.களவாடும் பொருளெல்லாம் திலகர் திடல்தான் போகுமென சீனி சொல்வான். திலகர் திடல் சந்தையில் எவனும் விற்றிருப்பானா என்ற ஐயத்தில் போய் பார்த்தேன். எங்கும் இல்லை. கண்டுபிடிக்க முடியாத ஆற்றாமையில் அழுகை வந்தது.

சரியாக ஒரு வாரம் ஆயிற்று. ஒரு ஞாயிறு அதிகாலை 6 மணிக்கு சென்று ரங்கா பிட்ச்”-ல் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கையில் சந்தானம் அடித்த சிக்ஸரை பொருக்கப் போய் முட்புதரில் ஒரு சைக்கிளை பார்த்தேன்..அட! என் பெயர் பொறிக்கப்பட்ட சைக்கிள்.. என்னுடைய சைக்கிள்!”. முன் சக்கர ரிம் வளைந்து, டயர் கிழிந்து யாரோ அடித்து போட்ட அப்பாவியாய் அது என்னை பார்த்து காப்பாற்றுமாறு கெஞ்சியது.  அள்ளிகொண்டு வந்து ரூ.300 கொடுத்து ஓவாரய்லிங் செய்து, புது லாக் வாங்கி பூட்டி வைத்தேன்.

படித்து முடித்து வேலைக்கு சேர்ந்து சேல்ஸ்க்கு டூவீலர் அவசியமெனப்பட்டதாலும், சைக்கிள் தனது டூவீலர் அந்தஸ்தை இழந்த நேரத்திலும் நான் ஸ்பெளண்டர் வாங்கினேன். அம்மாவின் வற்புறுத்தலில் 2004ல் நானும், பாலாவும் திலகர் திடல் காதர் பாயிடம் ரூ. 400க்கு என் சைக்கிளை விற்றோம்.

வெளியூர் சென்று எந்த ஊர் பேரிந்து நிலையத்தில் இறங்கினாலும் அருகில் கண்டிப்பாக ஒரு சைக்கிள் வாடகை கடை இருக்கும். வரிசையாக எண்கள் போடப்பட்ட சைக்கிள்கள் நிறுத்தி வக்கப்பட்டிருக்கும். நாம் வேலை பார்க்கும் கம்பெனியின் விசிட்டிங் கார்டு மட்டும் தந்தால் போதும். சைக்கிளை நாம் எடுத்து கொள்ளலாம். அந்த ஊரில் எல்லா இடங்களுக்கும் சைக்கிளில் சுற்றி நம் வேலையை முடித்துவிட்டு திரும்பி வரலாம். இன்னும் சுவாரசியமாக தேனி பேருந்து நிலையத்தில்MS சைக்கிள்ஸ்-ல் எடுத்த சைக்கிளை லட்சுமிபுரம் MS சைக்கிள்ஸ் கிளை-2லோ, சின்னமனூர் செல்கிற வேலையிருப்பின் வீரபாண்டி MS சைக்கிள்ஸ் கிளை-3 லோ, போடி கிளையிலோ கூட ஒப்படைத்துவிட்டு வரலாம்.

சிவகாசி சென்றால் குறிப்பிட்ட 31-எண் கொண்ட சைக்கிளில் சென்றால்தான் ராசி, வேலையாகும், ஆர்டர் கிடைக்கும் என்று என்னுடன் வேலை பார்க்கும் ரவி அந்த எண்ணுள்ள சைக்கிளை மட்டுமே எடுப்பான். ஒவ்வொரு மாதமும் 12 மற்றும் 25 தேதிகளில் இவன் சிவகாசிக்கு வருவதாக உறுதி கூறி மேற்படி நைனா சைக்கிள்ஸ் அண்ட் ஆட்டோமொபைல்ஸ்மணி 31ம் எண் சைக்கிளை வேறு யாருக்கும் தெரியாமல் ரவிக்காக தயாராய் வைத்திருப்பார்.
 
இன்றைக்கு சைக்கிள் கடைகள் மறைந்துவிட்டன.கிராமங்களில் போய் குடி கொண்டன சைக்கிள் கடைகள். வாடகை சைக்கிள் கான்சப்ட் ஏன் வாடகை பைக், வாடகை கார் என வளர்ச்சியடையவில்லை எனத் தெரியவில்லை. ஆனால் காலேஜ் ஹவுஸ் அருகில் யாரோ பைக்கை வாடகைக்கு தருவதாக முன்பொருமுரை கேள்விப்பட்டுள்ளேன். ஆனாலும் சைக்கிள் போல வராது.

பால்காரர், தபால்காரர், கூரியர்பாய், எலக்ட்ரிசியன், போன்ற சிறு தொழில் செய்யும் அனைவரின் தொழிலுக்கான முதல் முதலீடு சைக்கிள்தான்.

ரேஞ்சர் டைப் சைக்கிள்கள் வந்து, கியர் சைக்கிள் போய், ரேஸ் சைக்கிள் ஓடியே...ப்போய் இப்போது மணிக்கு 60 கிமி வேகம் போகும் சைக்கிளும் வ்ந்துவிட்டது.

இதொ! என் நாலரை வயது பையன் சைக்கிள் கேட்கிறான். நான் மறுப்பேதும் பேசவில்லை..உடனே வாங்கி வந்துவிட்டேன்.

1 comment:

  1. 'மறக்க முடியாத நினைவுகள்' நண்பரே!

    ReplyDelete