Monday, 28 October 2013

ஆட்டோ 20 ரூபா, கேமரா 30000

முன் இரவு...............

இரவு பதினோரு மணிக்கு நானும் ரமேசும் எழும்பூர் இரயில் நிலையம் வந்திறங்கினோம். 27B வருவதற்காக காத்திருந்தோம். நீண்ட நேரமாய் பேருந்து வந்த பாடில்லை.

ஒரு ஆட்டோ ஓட்டுநர் அருகில் வந்தார்.... ”சார்! எங்க போனும்”

”சேப்பாக்கம்” .

” 20 ரூபா கொடு சார்! சேர் ஆட்டோ!”

”இல்லை.  பஸ் வந்துடும்”

” பஸ் வராது. அப்டியே வந்தாலும் நைட் சர்வீஸுதான். டபுள் சார்ஜ்” – என மிரட்டல் விடுத்தான் ஆட்டோ ஓட்டுநன்... அதென்ன ஓட்டுநன்.. மரியாதையில்லாமல்... ஆரம்பத்தில் அவன்மேல் அப்படித்தான் மரியாதை கோண்டிருந்தேன்.

”பஸ் லேட்டாகும் சார்”

நான் கண்டுகொள்ளவில்லை.

திரும்பி சென்ற ஆட்டொ ஓட்டுநன் இன்னொருவனை அழைத்து வந்தான்.

என் நண்பன் ரமேசிடம் சென்றனர்.. “இன்னாபா! வர்றியா! எங்க போணும். சேர் ஆட்டோ! 20 ரூபாதான்?”

”இல்லை. ஃபிரண்டுக்காக வெயிட் பண்றேன். ட்ரெயின்ல வர்றான். வரட்டும்” –என்றான்.

“ஃபோன போட்டு கூப்டுபா! சீக்கிரம் போலாம்ல” – என அதட்டினான் இன்னொரு ஆட்டோ ஓட்டுநன். இவன் வெளியூரிலிருந்து வந்து ஓட்டும் ஆட்டோக்காரன் போல. பேச்சு வழக்கு சென்னைவாசி போல இல்லை.

பேசிய தொணி சரியில்லை. எனக்கு கோபம் வந்தது.

 “ஹலோ! அவன் சீக்கிரம் போவான், லேட்டா போவான்...போன் போடுவான்..போடமாட்டான்..உங்களுக்கென்ன?.. உங்க வேலைய பாருங்க.  போய் உங்க ஆட்டோவ ஓட்டுங்க பாஸு” என்றேன்.

” ஆங்…. நீ சவாரி வந்தாதானே! ஆட்டோ ஓட்டமுடியும்”

”வர முடியாது! நீ எதுக்கு பாஸு நைட்ல ஆட்டோ ஓட்டற. வீட்டுல போய் தூங்கு பாஸு” –என சிரித்து கொண்டே சொன்னேன்.

“ எனக்கு தூங்கத் தெரியும்.. நீ சொல்லத் தேவல!” என்றான்.

“ அதே மாதிரி! எனக்கு பஸ்ல போகத் தெரியும். நீ போய் உம் வேலைய பாரு” என்றேன்.

முதல் ஆட்டோ ஓட்டுநன் வந்து மறித்து....

”கோவப் படாத சார்! நீ மெட்ராஸா. எந்த ஏரியா சார்?”

”ம்ம். கொருக்குப்பேட்டை..இன்னா?”

“ மெட்ராஸ் மாதிரி தெர்லயே. வேற மாத்ரி பேஸ்ற”

“ எங்கப்பு கரீக்டா  தமிழ் பேச சொல்லிகொடுத்தாரு. அதான் உங்கள மாதிரி இல்லாம வேற மாதிரி தமிழ் பேசுறேன்” என்றேன்.

இருவரும் முறைத்தனர்.

அவர்கள் முறைப்பை குறைக்க நான் அவர்களை பார்த்து சிரித்தென்.

27B வந்தது.

ரமேஷிடம் ”வர்றேண்டா” என விடை பெற்றேன். 

“வர்றேன் பாஸு” - என ஆட்டோக்காரரை கையசைத்தேன்.

அவரும் பதில் சலாம் வைத்தார்.

பேருந்தில் ஏறினேன்.

“ D1 ஒண்ணு” –கேட்டேன்

டிக்கெட்டை கிழித்து கொடுத்தார் நடத்துநர். 8 ரூபாய்.

நான் வெளியே எட்டிப் பார்த்து அந்த ஆட்டோ ஓட்டுநனிடம் ‘ பாஸு. 8 ரூபாதான் டிக்கெட்டு. சேப்பாக்கம் வர்றீங்களா?” –கத்தினேன்.

” போலாம் பா..... ரைட்” என்றார் நடத்துநர்..ஊர்ந்தது பேருந்து.
 ------------------------------------------------------------------

பின் இரவு....................

நல்ல தூக்கத்தில் இருந்தேன்.

இரவு 2 மணி இருக்கும். ரமேஷ் செல்லில் அழைத்தான்,. 

எடுத்தேன். “ சொல்லுடா! என்னடா இப்ப கூப்டுற!”

“மாப்ள! இப்பதாண்டா வீட்டுக்கு வந்தேன்”

மணியை பார்த்தேன் . அதிகாலை 3 மணி.

”என்னாச்சுடா?”

”பஸ் வரல. அவன் ஆட்டோலதான் ஏறுனேன்”

”ஏண்டா? ஏதும் பிரச்சினையா?”

”ஆமாண்டா! ஆட்டோல ஏறி பாரீஸ் வந்தேன். 1D நின்னுது. என்னோட கேமரா பவுச்ச ஆட்டோ சீட்டுக்கு பின்னாடி வச்சுருந்தேன். அவசரத்துல மறந்துபோய் பஸ் ஏறிட்டேன்.”

”அப்புறம்”

“ அப்புறம்தாண்டா காமெடி! பீச் ஸ்டேசன் தாண்டி போனப்புறம்தான் ஞாபகம் வந்தது. உடனே இறங்கிட்டேன். பேச்சு வாக்குல அந்த ஆட்டோ டிரைவர் அவன் செண்ட்ரல் ஸ்டாண்ட்-னு சொன்னான்டா. சரி அங்கபோய் பாப்பம்-னு 
நேரா சென்ட்ரல் ஆட்டோ ஸ்டாண்ட்-க்கு போய்ட்டேன்”

“ சரி. கேமரா கிடைச்சுச்சா. இல்லையா”

”சென்ட்ரல் போனா ஸ்டேண்ட்ல ஒரு 100 அட்டோக்கு மேல நிக்குது மாப்ள!. சரி! எல்லா ஆட்டோ பின்னாடியும் கைய விட்டு தேடினேன். கிடைக்கல. ஒரு மணி நேரம்டா! தேடிகிட்டே இருந்தேன்.”

” டேய்! கேமரா என்னாச்சு?”
”அந்த ஆட்டோ நம்பரும் தெரியாது. சரி! மறுபடியும் எக்மோர் போய் பாக்கலாம்னு இன்னொரு ஆட்டோ பிடிச்சேன்”

”சரி. சீக்கிரம் முடிடா கதையை! தூக்கம் வருது....கேமரா கிடைச்சதா இல்லையா?”

”எக்மோர் போனா! ஒருத்தனும் இல்லை. மறுபடியும் அதே ஆட்டோலயே பாரீஸ் வந்து இறங்கினேன். கேமரா போன சோகத்துல பஸ்ஸுக்கு நின்னுகிட்டு இருந்தேனா?”

“ அப்ப கேமரா டும்-மா? .....த்தா. முப்பதாயிரம் பூட்சா? உனக்கு அறிவுக் …..தியே இல்லடா”

“டே! மாப்ள! நிறுத்து.... முழுக் கதைய கேளு. கிளைமாக்ஸ்தான் சூப்பரு.  பாரீஸ்ல நம்ம இரானி டீக்கடையாண்ட ஒரு ஆட்டோ நின்னுகிட்டிருந்தது. சரி! சும்மா போய் பின்னாடி கைய விட்டு பார்ப்போம்னு ஒரு இன்ஸ்டிங்ட்-டா மச்சான். ’ரமேஷ் இன்ஸ்டிங்ட்-னு வச்சுக்கோயேன்’..உள்ள கைய விட்டேனா?”

” அந்த ஆட்டோக்காரன் வந்து மொத்துனானா. செம அடியா மாப்ள!”

”இல்லடா வெண்ணை. கைய உள்ள உட்டா..என் கேமரா பவுச் அப்டியே இருந்துச்சுடா!”

“எப்பிடிர்ர்றா? ”

”ஆமாம். மச்சான். நான் நம்பல. உள்ள கைய உட்டு கேமராவ எடுத்தேனா?,  இரண்டு பேரு கத்திகிட்டே டீக்கடையிலயிருந்து ஓடி வந்தாங்க... கிட்ட வந்தா அதே அட்டோக்காரங்க மச்சி” 

“ அய்யே...சூப்பர் டா...”

“ அப்புறம் விசயத்தை சொன்னேன். என்னைய எறக்கி உட்டுட்டு அவங்க அதே ஆட்டோல  அண்ணாநகருக்கும், நுங்கம்பாக்கத்துக்கும் சவாரி வேற போய்ட்டு வந்துட்டோமே-ன்னு சொல்லி ஆச்சரியப்பட்டாய்ங்க-டா ”

“ ஏறுனவங்க எவனுமே கேமராவை  பாக்கலியா?..நல்ல நேரம்டா உனக்கு... வேற என்ன சொன்னாய்ங்க” 

“ இம்ம். சொன்னாய்ங்க. உம் ஆளு 8 ரூவாய்க்கு சேப்பாக்கம் வரச் சொன்னாருல. இப்போ எங்க ரெண்டு பேருக்கும் மசாலா பால் வாங்கி கொடுத்துட்டுதான் போணும்னு சொல்லி, வாங்கி குடிச்சுட்டு, அதே ஆட்டோல வீட்டுக்கு இப்பதான் வந்து இறக்கி உட்டாங்க. இப்பதாண்டா வந்தேன்.”

“ மச்சான் செம அட்வென்ச்சர்-டா. கிளப்பிட்ட.”

“ நல்ல வேளை கேமரா கிடைச்சுதே. இல்ல முப்பதாயிரம் டும்-ஆயிருக்கும்.”

“ அது சரி! வீட்டுல இறக்கிவிட அந்த ஆட்டோக்காரங்களுக்கு எவ்ளோடா கொடுத்த”

“அதே! இருபது ரூபா-டா மச்சான்”

“ அவய்ங்க நல்லவய்ங்க மச்சி. .கொஞ்சம் அதிகமா கொடுத்திருக்கலாம்ல ” என்றேன்.

”நீ சொல்லித்தான் அவங்க நல்லவங்க தெரியும் மச்சி....போ..போயி தூங்கு..” என்றான்.

No comments:

Post a Comment