Saturday 22 March 2014

அதிமுக-வே! அரசியல் சாசனமே! அண்டப் புழுகே!



நெடுஞ்சாலை நெடுக பதாகைகள். நமது காடு கண்ணி காக்கிற புரட்டுத்தலைவிக்கு வரவேற்பாம். அரிச்சுவடியே, அம்பாரி யானையே, அரசியல் அறிவே, நீதி பரிபாலணமே…….இப்படியாகப்பட்ட பலவிதமான பட்டங்களுடன் நம் புரட்டுத்தலைவி அப்பதாகைகளில் சிரித்துகொண்டிருந்தார். அதில் ஒரு பட்டம்தான் அரசியல் சாசனமே!!! என்றிருந்தது. எனக்குள் குமட்டலையும், அருவெறுப்பையும், கோபத்தையும், எரிச்சலையும் சம விகிதத்தில் கலந்து ஒரு உணர்வை ஏற்படுத்தியது அந்த பட்டம். அரசியல் சாசனமே!’...உவ்வே……

  
அரிச்சுவடியே! –சரி பல மொழிகளை தம் தேவைக்காக தெரிந்து வைத்திருப்பதால் ஜெயலலிதாவை இப்படி புகழ்ந்து தொலைக்கலாம். தவறில்லை. 

அம்பாரி யானையே!” – இப்படியும் அழைப்பதால் சில பல பொருத்தங்கள் ஃபிசிக்கிலாக உண்டென நம் எல்லோருக்கும் தெரியும். அழைத்து கொள்ளட்டும்.

அரசியல் அறிவே!” – அம்மாவின் அறிவு அளப்பறியது, யாருக்கும் இல்லாத அறிவு, “கைச்சின்னம் என்பதால் எல்லோர் கையையும் வெட்டவா வேண்டும்?”, “மாம்பழம் என்றால் மரத்தையா வெட்ட முடியும்?”, “இது குதிரை றெக்கை” , “அது இயற்கை காட்சி, ”அண்ணா ஏதிஸ்ட் அல்ல”  என்றெல்லாம் சொன்ன அவரது அரசியல் அறிவை மெச்சலாம். 

நீதி பரிபாலணமே” – ஆஹா! உலக அளவில் நீதித்துறையின் இண்டு இடுக்கெல்லாம் நுழைந்து வாய்தா வாங்குவதில் ஈடு இணையற்ற புரட்சி செய்து கின்னஸ் சாதனை படைக்கவிருக்கும் அற்புதவள்ளிக்கு இந்த பட்டம் பொருத்தமானதே!. ஏற்றுக்கொள்வோம்.

ஆனால் அரசியல் சாசனமே என்று பதாகையுடன் பட்டத்தை வைத்தான் எவனோ?. சகிக்க முடியவில்லை. அதுவும் இந்தம்மாவுக்கு எதுக்கடா இந்த பட்டத்தை வைத்தான்?,  என எனக்கு தூக்கமும் வரவில்லை. அதற்கான பொருத்தம் எனக்கு விளங்கவே இல்லை. ஒருவேளை அந்த கட்சிக்கான சாசனத்தை அந்தம்மா உருவாக்கியிருக்கிறதா? அதனால்தான் அந்த பட்டமா? அந்த கட்சியின் கொள்கை பிரகடனமென்ன?, என்ன சாசனத்தை அந்தம்மா உருவாக்கியிருக்கிறது? இல்லை.. எம்ஜிஆர் சாசனத்தை இது வழுவாது காப்பாற்றி வருகிறதா?. அந்த கட்சி என்ன அரசியல் நோக்கோடு, என்ன தேவைக்காக, எதை அடைவதற்கு உருவாக்கப்பட்டது என்று எந்த ஒரு தனி மனிதனுக்கோ, பெரும் அரசியல் அறிஞருக்கோ தெரியுமா?. தெரிந்தால் விளக்க முடியுமா?. அப்படியே விளக்கினாலும் அப்படி ஒரு பட்டத்தை சூட்ட இந்தம்மா தகுதி பெற்றிருக்கிறதா?. மனசாட்சி உள்ளவன் கொடுப்பானா? அதை மனோதிடம் உள்ளவன் சகிப்பானா?

அதிமுக எனில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். அப்படிதான் சொல்லிக்கொண்டு திறிகிறான்கள். நமக்கு அது அடிமை திமுக”, ”அம்மா திமுக”, ”அண்டப்புளுகு திமுக”…அவ்வளவே!. இதுதான் புரட்டுத்தலைவி அங்கம் வகிக்கும்…இல்லையில்லை..நிரந்தரமாய் இருக்கும் அக்கட்சியின் பெயர். கட்சியின் பெயருக்கும், முதலெழுத்தான அண்ணாவுக்கும், புரட்டுத்தலைவிக்கும், அது செயல்படுகிற தரத்திற்கும் ஏதாவது கால்கிலோ ஒற்றுமை இருக்கிறதா? கண்டுபிடிக்க முடியுமா?

சாசனம் என்றால் என்ன? ஒரு கொள்கை. அதன் விளக்கம். ஜெயலலிதா அப்படி ஒரு சாசனத்தை வகுத்திருப்பின் அது அக்கட்சியின் கொள்கை எனலாம். அதை எடுத்தாள்கிற ஜெயலலிதாவுக்கு அப்படியொரு பட்டம் தரலாம். அந்தக் கட்சிக்கு அப்படியென்ன சாசனம் இருக்கிறது. அந்தம்மா ஏதாவது சாசனத்தை பற்றி பேசியிருக்கிறதா? யாரும்தான் கேள்விப்பட்டிருக்கோமா? அப்படி அதிமுக என்ற கட்சியின் கொள்கை என்ன?

ஒருமுறை எம்.ஜி.ஆரிடம் பத்திரிக்கையாளர்கள் உங்க கொள்கை என்ன?என கேட்டதற்கு “அண்ணாயிசம்என்று சொன்னதாக கேள்வி. அண்ணாயிசம் என்றால் அண்ணாவின் கொள்கை. அண்ணாவின் கொள்கையே அதிமுகவின் கொள்கை என்ற அர்த்ததில் எடுத்துகொண்டாலும் அண்ணாவின் கொள்கையான பகுத்தறிவு, கடவுள் மறுப்பு, திராவிடம், மொழிக்கொள்கை இன்ன பிற என்ன கொள்கையை எம்ஜிஆர் தனதாக்கி கைகொண்டார் என்று யாருக்காவது தெரியுமா? அக்கொள்கைகளை விளக்கி எங்காவாது, ஏதாவது பேசியிருக்கிறாரா எம்ஜிஆர். அண்ணாவை எதிலாவது பிரதிபலித்தாரா எம்ஜிஆர்?. அண்ணாவின் கொள்கையை அவர் கைகொண்டாரா? என்பது அவர் வழிபட்ட மூகாம்பிகைக்கே தெரியும். சாமிகுத்தம் ஆகுமென்பதாலும், அவர் தற்போது இல்லை (இது இன்றும் கைக்கெடிகாரம் டிக்..டிக்..டிக் என அடித்துகொண்டிருக்கிறது என அவர் சமாதியில் காது வைத்து கேட்கும் யாருக்கும் பொருந்தாது) என்பதாலும் எம்ஜிஆரை மேற்கொண்டு குடையாமல் கொஞ்சம் விட்டுவிடுவோம்.

அண்ணா – என்ற சொல்லையோ, பெயரையோ, அவர்தம் கொள்கையையோ, அவர் எழுதிய நூற்களையோ, அவரது பேச்சின் மேற்கோள்களையோ, அவர் போதித்த கருத்துக்களையோ எங்காவது ஜெயலலிதா பேசி யாரேனும் கேட்டதுண்டா? யாகம் வளர்ப்பவனை இழித்தவர் அண்ணா, இது யாகத்தை முன்னின்று நடத்துகிற சாதி. கடவுள் இல்லை என்றார் அண்ணா. இது அதிகாலையில் 4 மணிக்கு புடை சூழ கோயில் செல்லும் குலம். அண்ணா ஆரிய மாயையை கிழித்து எறிந்தவர். ஜெயா ஆரியத்தின் குலக்கொழுந்து. அண்ணாவை எங்கே எப்போது பின்பற்றினார் ஜெயலலிதா? அண்ணா என்ற வார்த்தையை எத்தனை தடவை உதாரணமாக அவர் எடுத்தியம்பி இருக்கிறார்?,  அண்ணாவை பற்றி கிஞ்சித்தும் பேச மறுக்கிற, பேசத் தெரியாத கட்சிக்கு பெயர் அண்ணா திமுக, அதற்கொரு நிரந்தரப் பொதுச்செயலாளர், அவருக்கொரு பட்டம் அரசியல் சாசனமே”. ச்சீ.

சரி!. அண்ணாவையும் விட்டுவிடுவோம். அடுத்து திராவிடம் என்று பெயரை உள்ளடக்கி நிற்கிறது அக்கட்சியின் பெயர். அண்ணா திராவிடம் அல்லது வெறுமனே திராவிடம் என்று எப்படி எடுத்து கொண்டாலும் அதற்கொரு பொருளை உட்கருத்தை ஜெயலலிதாவால் விளக்க முடியுமா? அண்ணா திராவிடம் எனில் அண்ணாவுடைய திராவிடம்தானே, அதனால் எங்கெளுக்கென்ன என்கிற அளவில்தானே அண்ணாவையும் திராவிடத்தையும் இவர்கள் மதிக்கிற அழகு இருக்கிறது.  அல்லது வெறுமனே திராவிடம் எனில் இதுவரை எத்தனை முறை ஜெயலலிதா சொல்ல திராவிடத்தை பற்றி நாம் கேட்டிருக்கிறோம். திராவிடத்தை பற்றி அவர் இதுவரை என்ன சொல்லியிருக்கிறார்?. என்ன விளக்கியிருக்கிறார்?. அல்லது அச்சொல்லை உருவாக்கிய தலைவர்களை பற்றி ஏதாவது பேசியிருக்கிறாரா? யாராவது அரசியல் அறிஞர்கள், நடுநிலை நியாயவாண்கள் கேட்டுச்சொல்வார்களா? இன்ன தேதியில், இன்ன இடத்தில் இவர் திராவிடத்தைப் பற்றி ஜெயலலிதா பேசியிருக்கிறார் என வரலாற்றாசிரியர் யாராவது கூறுவார்களா?. அவர்களுக்கு தெரியாததை பற்றி ஏன் கேட்கிறீர்கள் என நம்மை கேட்கிற பட்சத்தில் நாம் அவரகளிடமிருந்து திராவிடத்தையும் விட்டுவிடுவோம். போய் தொலைகிறது.

அடுத்து முன்னேற்றம்”. இந்த ஒற்றை வார்த்தையை பற்றி  சொல்ல ஆரம்பித்தால் அதன் முன் ஒட்டான திராவிடமும், அண்ணாவும் வந்துவிடுவதால் திராவிடத்தின் முன்னேற்றத்திற்காக அவர்கள் எதையும் செய்யவில்லை என சுலபமாக விளங்கும். எவ்வாறெனில்? திராவிடத்தை பற்றியும், அண்ணாவை பற்றியும் பேசாதவர்கள் அதன் முன்னேற்றம் பற்றி, அதாவது அண்ணா திராவிட முன்னேற்றம் பற்றி என பேசியிருக்க முடியும், எதை முன்னேற்றியிருக்க முடியும். ஆக முன்னேற்றமும் இங்கு இல்லையென்றான பின் ‘கழகம்என்ற வார்த்தையில் மிச்சம் என்ன சொல்கிறது அதிமுக?

’கழகம்’ என்றால் பல பேர் உறுப்பினராக கூடி, வாதிட்டு, கொள்கை பேசி, ஒன்றுபட்டு, ஒத்த கருத்துக்காக உழைத்து குறுகிய கால, நீண்ட கால கொள்கையை முன்னெடுத்து செல்வது கழகமாகும். அதிமுக என்ற கட்சியில் முதலில்  பல பேர் கூட முடியுமா? முடியும் என்று வைத்துகொண்டாலும்…. வாதிட முடியுமா? கண்டிப்பாக முடியாது…. கொள்கை பேச முடியுமா? முடியவே முடியாது. குறுகிய கால கொள்கையை முன்னெடுக்க முடியுமா? கண்டிப்பாக முடியாது. நீண்ட கால கொள்கையை முன்னெடுத்து செல்ல முடியுமா? கொள்கையே இல்லையே. எதை?,  எப்படி முன்னெடுப்பது?. அப்படியெனில் அந்த கூட்டமும் கூடுகிறதே அதற்கு என்ன பெயர்? என்று கேட்டால் என்னைப் பொருத்தவரை அக்கூட்டத்திற்கு சாமியாரினி மடம்என்று பெயர் சொல்லலாம். நிரந்தர பொது ஆதீனமாய், மகர ஜோதியாய் காட்சியளிக்கிற, படியளக்கிற, அருள் பாலிக்கிற, மடப்பள்ளி நாயகி ஆகாசப்புளுகின் ஏஜண்ட், அண்டப்புளுகின் நிரந்தர பொதுச்செயலாளராக அதில் வீற்றிருப்பவர் தான் புரட்டுத்தலைவி, இதயதெய்வம், செல்வி, அம்மா ஜெயலலிதா அவர்கள். இதில் கழகம் எங்கு இருக்கிறது. ஒரே ஒரு முரட்டு தெய்வம். அது மூச்சுவிடுவதுதான் கொள்கை.

எல்லா கட்சியும் ஒன்றுதான் என சொல்லிகொண்டு திரிகிற ஊடக சொம்புகள் அதிமுக-வை திராவிடக் கட்சி என்று என்ன அளவுகோளில் சொல்கிறது என நமக்கு விளங்கவில்லை. சென்ற வாரம் அதிமுக கவுன்சிலர்  தோழர் ஒருவர் ‘எப்ப பாசு உங்க தலைவர் வேட்பாளர் பட்டியல வெளியிடுவார்” எனக் கேட்டார். அதற்கு இன்னொருத்தர் “அதெல்லாம் நாள், கிழமை, நல்ல நாள் பார்த்துதான் வெளியிடுவாங்க பாசுஎன்றார். உடனே அந்த அதிமுக கவுன்சிலர் தோழர் “ ச்சே! ச்சே! அவய்ங்க திராவிடக் கட்சி.. அதெல்லாம் பார்க்க மாட்டாய்ங்க..எப்ப வேணாலும் வெளியிடுவாங்கஎன்று சொல்ல நான் எதுவும் பேசாது கேட்டுக்கொண்டேன். ஆக! அந்த கட்சியில் இருக்கிற ஒருவரே தான் சார்ந்துள்ளது திராவிடக் கட்சியல்ல என்று மனதளவில் புரிந்து வைத்திருக்கிறார். பின்னர் எப்படி அதிமுக திராவிடக் கட்சியாகும். நாய்க்கு சிங்கம்’-னு பேர் வைத்துவிட்டால் அது சிங்கம் ஆகிடுமா?

திராவிடம்-னு பேர் வச்சிருக்கிற எல்லாக் கட்சியும் கொள்கைய பின்பற்றுகிறதா? என்று யாராவது அதிபுத்திசாலி கேள்விக் கணைகளை தொடுக்கலாம். பின்பற்ற இயலவில்லை என்பதற்காக அக்கொள்கையை விளக்காமல், எடுத்து சொல்லாமல் இருந்துவிட முடியுமா? நாம் கேட்டிருக்கிறோம், கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஒரு வயதான் நிகழ்கால திராவிடத் தலைவர் திராவிடம் என்ற சொல்லை ஒவ்வொரு மேடையிலும் விளக்கிச் சொல்வார். பெரியாரை பார்க்காது போயிருப்பின் நான் கம்யூனிஸ்டு ஆகியிருப்பேன் என்று சொல்கிற அந்த தலைவரை நாம் பார்த்து கொண்டுதான் இருக்க்றோம். அவர் தன் கொள்கை நாயகர்களாக டி.எம்.நாயரை பேசுவார், நடேசன் அய்யாவை பேசுவார், டபில்யூ.சவுந்திரபாண்டியனை பேசுவார், பெரியாரை பேசுவார், அண்ணாவை அடிக்கடி பேசுவார், அக்கொள்கை சார் நீதிக்கட்சி வரலாற்றை பேசுவார், திராவிடர் கழகத்தை பேசுவார், தன் கட்சியை பற்றி பேசுவார், அதைவிட முக்கியமாக மற்றவரை கூடுதலாக பேசவும் விடுவார். 

சரி! எவன் கொள்கையை கேட்கிறான்? யார் கொள்கையை பின்பற்றுகிறான்? திராவிடம்-னு பேர் வச்சிருக்கிற கட்சிய சேர்ந்த எல்லாரும் கொள்கையை பின்பற்றுகிறானா?என்றும் யாரும் கேட்கலாம். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் பாடத்தை சொல்லிக்கொடுப்பதுதான் நியாயமானது, மாணவர் சிலர் பின்பற்றி படிப்பர், சிலர் வெற்றிபெறுவர், சிலர் சரியாக பின்பற்றாது தோல்வி அடைவர், சிலர் படிக்காமலே இருப்பர். அதற்காக ஆசிரியரோ?, பள்ளிக்கூடமோ? பாடமே நடத்தாமல் இருப்பது நல்லதா? அது மாதிரி நடத்தாமல் இருக்கிற பள்ளிக்கூடம் நல்ல பள்ளிக்கூடமா? ஒரு கட்சி என்பது பள்ளிக்கூடமெனில், அதன் ஆசிரியர்தான் தலைவர். ஆக இன்றைய தேதியில் எந்த கட்சியினையுடைய தலைமை வாத்தியார் சரியாக பாடம் நடத்துகிறார் என்பதை நடுநிலையாளர்களுக்கு விட்டுவிடுகிறேன். எந்த பள்ளிக்கூடம் சரியான பள்ளிக்கூடம் என்பதையும் அவர்களே சொல்லட்டும்.

நாம் இவ்வளவு நீட்டி முழக்கினாலும் அதிமுக பதறிப்போய் கேட்டுக்கொண்டு நாளைக்கே கொள்கை யாத்து பேசவா போகிறது. இதோ! இது தேர்தல் காலம். இப்பொழுதுதான் ஓய்வின்றி ஜெயலலிதா பொதுக்கூட்டத்திலோ அல்லது மூடிய கேபினுக்குள்ளோ பேசுவார். பார்ப்போம் இப்போதாவது கொள்கை, திராவிடம், பகுத்தறிவு, அண்ணா, பெரியார் என்றெல்லாம் பேசுகிறாரா என பார்ப்போம். அப்படி பேசாவிட்டாலும் நமக்கு கவலையில்லை. போகட்டும் கழுதை. ஆனால் இந்தம்மாவுக்கு அரசியல் சாசனமே”-னுலாம் பட்டம் கொடுத்து அரசியலையும், அரசியல் கொள்கை பேசுகிற அரசியால்வாதிகளையும் கேவலப்படுத்தக் கூடாது..வேண்டாம்.

அய்யா! அண்ணா திமுக அடிமை பெருமக்களே! உங்க தலைவியை தாராளமாய் என்னத்தையும் சொல்லி தாலாட்டுப்பாடுங்கள், நிரந்தர ஆதீன கர்த்தாவே, மகர பேதியே, தகரத் தாரகையே, போயஸ் போகியே, மடப்பள்ளி பொங்கலே, அண்டப்புழுவே, ஆகாசப்புளுகே,என்று தெருவெல்லாம் கூவுங்கள். யார் கேட்கப் போகிறார்கள்?. அதைவிட்டுவிட்டு அரசியல் சாசனமே, பாசனமே-ன்னு அர்த்தமில்லா அல்வா விடுவது தயவுசெய்து வேண்டாம். சகிக்க முடியவில்லை.

1 comment:

  1. வணக்கம் நண்பர்களே
    உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் அழகை அதிகபடுத்த கொள்ளுங்கள் உடனே என்னுடைய இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

    ReplyDelete