Thursday 27 July 2017

யானை பொம்மை

வீட்டுக்கு வந்த ஒருத்தர் யானை பொம்மை ஒன்றை வாங்கி வந்து அன்பளிப்பாக தந்துவிட்டு போனார் . பிற்பாடு இன்னொருத்தர் வந்தார். ”வீட்டில் யானை இருக்கக்கூடாது யானைக்கு பசி அதிகம்; வீட்டுல இருக்கிற காசெல்லாத்தையும் காலி பண்ணிடும்”ன்னார்.
”இல்லைங்க. அது பொம்மை. அப்படியெல்லாம் சாப்டாது”ன்னு எகத்தாளமா பேசுனேன்.
புதுசா வீடு கட்ற எல்லாத்துக்கும்(முன் கூட்டிய அனுபவம், திட்டமிடல் இல்லாம) வர்ற பணக்கஷ்டம்தான் எனக்கும்னு அவருக்கு புரியல.

 சரி அவருதான் அப்படின்னா,,. வர்றவன் எல்லாரும் அந்த யானை பொம்மையைத்தான் பாக்குறான். ஒருத்தன் “போய் ஏதாவது கோயில்ல வச்சுருங்க”ன்னான். அங்க உசுரோட யானையை வச்சுருக்காங்க. கேரளாவுல வீட்டிலேயே யானை வளக்கிறாய்ங்க. நான் பொம்மையைத்தாண்டா வச்சுருக்கேன்”னு புலம்ப வச்சுட்டாய்ங்க.

இன்னொருத்தரிடம் மிகவும் சீரியசாக முகத்தை வைத்துகொண்டு  “ஆமா சார்! இப்படித்தான் என் ப்ரெண்டு வீட்டுல வச்சுரருந்த ரெண்டு பாம்பு படம் அந்த வீட்டுக் குழந்தையை கொத்திடுச்சு”ன்னேன்.

என்னிடம் இந்த எகத்தாளத்தையெல்லாம் கேக்க சகியாத பலர் என் மனைவியிடம் போய் முறையிட. ஒருநாள் அவள் போய் அந்த யானை பொம்மையை பக்கத்தில் ஒரு கோயிலில் வைத்துவிட்டு வந்தாள்.
பணக்கஷ்டம் ஒண்ணும் தீந்தபாடில்லை. இன்னும் மோசமாகத்தான் உள்ளது நிலைமை.
முன்னொருமுறை என் வீட்டுக்கு வந்து யானைப்பசி, சோளப்பொறி என்றெல்லாம் சொன்னவர் நேற்று ஒரு பொம்மை வாங்கி வந்தார். குபேர பொம்மையாம்.
அப்பொம்மையின் வயிற்றை பார்த்தேன்.
யானையை காட்டிலும் பெரிய தொந்தியை குபேர பொம்மை கொண்டிருந்தது.

No comments:

Post a Comment