Thursday, 13 September 2012

ஏலியன்களும் ராசா சிக்ஜாக்-கும்

நிலவில் சிறு மாற்றம் தெரிந்தது. பெளர்ணமியா? அதற்காக இளஞ்சிவப்பு நிறத்திலா நிலவு தெரியும்,செம்மன் புழுதியில் காற்றடித்தால் எப்படி ஒரு காட்சி நம் கண்ணில் அகப்படுமோ அதுபோல் நிலவு செந்நிறமாய் ஒளித்தது.

நிலவு இப்படித்தான் இப்பொழுதெல்லாம் இருக்கிறதோ என்று சந்தேகமாகவும் இருந்தது.ஏனெனில் நிலவை மிகவும் உன்னிப்பாக நான் என் சிறு வயதில் மொட்டைமாடி தூக்கத்தின்போதுதான் கவனித்துள்ளேன், இன்றைய 2025ன் அவசர வாழ்வில் நிலவு என்னை விட்டு தொலைதூரம் போய்விட்டது.

ஏசியை ஆஃப் செய்து தூங்கினால் ராஜா தூங்கமாட்டான். மின்சாரம் சேமிக்கிர நேரம் காலையிலிருந்து இரவாக மாறிவிட்டது. நடுநிசியெனில் தூக்கத்தில் இருப்போம். ஏசியும் ஓடாதிருப்பின் விழிப்பு வராது. தூங்கச் செல்கிற நேரமாய் 9 மணிக்கு மின்சேமிப்பு நேரத்தை அரசு மாற்றிவிட்டபடியால் யாருக்கும் தூக்கம் வருமாட்டேன் என அடம் பிடிக்கிறது..

காற்றாடியில்லாத வாழ்க்கையை வாழ்ந்தவன் தான் நான்.இருப்பினும், இன்றைய வசதிகளை அனுபவித்தபின் வெறும் காற்றாடி மட்டும் தூக்கத்தை ஊக்குவிப்பதில்லை.ஏசி இல்லாமல் தூக்கம் வசப்படுவதுமில்லை.

மொட்டை மாடி செல்வோம் என என் பையன் இராஜா சொன்னான். என் மனைவியும் அம்மாவும் நாளை அரைக்கவிருக்கிற கொள்ளு சட்னி ரெசிபியை விவாதித்து கொண்டிருந்தனர்.

ராஜாவும் நானும் கொசு அருகில் வராத நீம் மேல்சட்டையையும், டிராக்கையும் அணிந்துகொண்டு இதோ! மொட்டைமாடிக்கு சென்றோம்.

நட்சத்திரங்களை என் பையன் எண்ணிகொண்டு இருக்கையில் இறுதியாக நிலவை பார்த்து “அப்பா! ஏம்பா? நிலா ரெட் கலர்ல இருக்குது?” என்றான்.

நானும் அதியசமாய் பார்த்தேன்.இதுமாதிரி தருணத்தில் நான் கேள்விப்பட்ட ”நிலா பாட்டி” உள்ளே  என்ன செய்துகொண்டிருப்பாள் என சிந்தித்தேன்.

”நிலா ஏம்பா?  ரெட் கலராச்சு! சொல்லுங்கப்பா?”

“நிலா ஜாம் சாப்டுருக்கும் டா!”

“அப்பா! நிலா என்ன Boy-ஆ Girl-ஆ ஜாம் சாப்ட.! எதுக்குன்னு சொல்லுங்கப்பா?”

”அமைதியா இரு ராஜா! நிலாவ பாரு!”

”எதுவோ? நிலா மேல இருந்து கீழ வர்ற மாதிரி இருக்குப்பா?”

”அதெல்லாம் இல்ல தம்பி! தூங்கு” என்றேன்.
என் அப்பா எனக்கு நிலவு பாட்டியின் கதையை சொன்னதை போல இவனுக்கு அந்த கதையை சொல்லி தூங்க வைக்க முடியாது. வடை சுட்ட பாட்டியையும், வடை சுட்ட காக்கைக்குமே நீண்ட ஒரு விசாரணை கமிஷன் வைத்த இவன் நிலவு பாட்டிக்கு என் மண்டையை உருட்டு உருட்டு என் உருட்டிவிடுவான்..வேண்டாம் இம்சை.

ஆனாலும் நிலவில் ஏதோ நிகழ்வதாய் எனக்கு பட்டது.
கூர்ந்து பார்த்தேன்.. எதுவோ நிலவில் இருந்து பிரிவதாய் உணர்ந்தேன்.

யாருக்காவது போன் செய்து கேட்போமா? யாரிடம் கேட்க?.
குறுஞ்செய்தி வந்திருக்குமே? கூகுள்-ல் ஏதாவது செய்தி வந்துள்ளதா? மொபைலில் தேடினேன். இன்பக்ஸிலும் இல்லை. தொலைக்காட்சி செய்தியில் சொன்னார்களா?. ம்கூம்.

எதுவும் இல்லை.

ஆனாலும் நிலவில் இருந்து ஒரு புகை மண்டலம் கீழ் நோக்கி வருவது தெரிகிறது. நிலவிலிருந்து கீழே ஒரு ஆயிரத்து சொச்சம் கிலோமீட்டர் தாண்டி புகை மண்டலம் வருவதாய் தெரிந்தது.
புகை குறுக குறுக மனித ஒருவமாய் அது சிறியதாக மாறுவதை இருவரும் கண்டோம்.

ராஜா பயத்தில் என்னை கட்டிகொண்டான்.

மேகங்கள் எல்லாம் சிகப்பு நிறமாய் மாறக் காண்கிறோம். புகை உருவங்கள் நான்காக பிரிகிறது. அதில் ஒரு  புகை உருவம் மேகத்தை கிழித்து, உடைத்து கொண்டு வந்தது. மேகம் உடைந்து தண்ணீர் புயலும் சேர்ந்து கொண்டது.

கண்ணுக்கு தெரிந்த காட்சி கலைவதற்குள் நாங்கள் முற்றிலுமாக நனைந்திருந்தோம். ஏதோ? சிகப்பு நிற திரவம் தண்ணீருடன் கலந்து எங்கள் ஆடைகள் நிறம் மாறியிருந்தன. அந்த சிகப்பு புகை உருவம் மேகத்துடன் கலந்து தண்ணீரை மாற்றிருந்தது.

நானும் பயந்துபோய் இராஜாவை அணைத்து தூக்கிகொண்டு வீட்டிற்குள் இறங்கினேன்..

சிறிது நேரத்தில் டமார்! டமார் என வெடிச்சத்தம் போல நான்கு சத்தங்கள் .
கேட்டது.

புகை உருவங்கள் எங்கோ? தரை இறங்கி விட்டன.

”அப்பா! பேய் மாதிரி வந்துச்சே! அது நம்ம் வீட்டுக்கு வந்துருமா? என இராஜா அழுதான்.

“ கெட்டவங்க வீட்டுக்குத்தான் அது வரும், நம்ம வீட்டுக்ககு வராது.. நானும் நீயும் ஸ்ட்ராங் வேற. யாராலும் நம்ம ஒண்ணும் பண்ண முடியாது “ என்று இருவரும் கைகளை டேஷ் என கிளாப் செய்தோம்.

No comments:

Post a Comment