Friday 21 August 2020

விஜய்-அஜீத் சண்டையை நிறுத்துங்க ப்ளீஸ்.

நடிகனை நடிகனாக பார்ப்பதை விட்டுவிட்டு தலைவனாக, கடவுளாக,  என பலவிதமாக பார்ப்பதால் என்ன பிரயோஜனம் வரப்போகிறது. சுத்த மண்ணாங்கட்டிங்கத்தனம் அது.  நடிகனை நடிகனா அளவிடுங்க. பாராட்டுங்க. போற்றுங்க. தூற்றுங்க. விமர்சனம் பண்ணுங்க. கழுவி ஊத்துங்க. தப்பில்லை.

மற்றபடி, வீட்டுக்கு போனா சாப்பாடு போடுவாரு, சிம்பிளா இருப்பாரு, இமயமலைக்கு செல்லும் ஆன்மீகவாதி, சுயமா ஒவ்வொரு நிமிசமும் தன்னை செதுக்கி முன்னேறினவருன்னுலாம் சொல்லி அவர்கள் நடிப்புத்திறமைய அளவிட முடியாது.

எம்ஜிஆர், ரஜினி போன்றவர்கள் அவர்கள் துறையின் மூலம் பேர் வாங்கியிருக்கலாம். புகழடைந்து இருக்கலாம். ஒப்புமை செய்தால் சிவாஜியை காட்டிலும் எம்ஜிஆர் பெரிய(ப்ரொபசனல்) நடிகரா என்றால் இல்லை.  கமலை விட சிவாஜி அப்படி ஒன்றும் சிறந்த நடிகரில்லை என்பது அவர்களை நடிகர்களாகவும், கலைஞர்களாகவும் அளவிடும் போது அனைவருக்கும் சுலபமாக தெரிந்துவிடும் உண்மை. 


எம்ஜிஆரும், ரஜினியும் ஸ்டைலா நடிப்பாங்கன்னு சொல்றவங்ககிட்ட ஸ்டைலுன்னா என்னன்னு கேட்டா எம்ஜிஆர் மூக்கை சிந்துவதையும், ரஜினி சிகரெட்டை தூக்கிப் போடுவதையும் தான் சிறப்பாக சொல்வர். இதை சுலபமாக சிவாஜியும், கமலும் கற்றுகொண்டு மூக்கை சிந்திவிடுவார்கள். பெரிய விசயமில்லை. மற்றபடி பாசமலரையோ, மகாநதியையோ மற்ற இருவர்கள் செய்து விட முடியாது.

இப்பவும் அதே மாதிரி ஒரு சூழல் இருக்கிறது. அஜீத்தா விஜய்யானு நடக்குற சண்டை மிகக் கொடூரமாக இருக்கிறது.  விஜய் ரசிகர்களை கூட கொஞ்சம் புரிந்து கொள்ள முடிகிறது. முன்ன சொன்ன மாதிரி எம்ஜிஆர், ரஜினி ரசிகர்கள் வழியில் அஜீத் ரசிகர்களை புரிந்துகொள்ளவே முடியவில்லை. 

இப்படி சொல்வதால் விஜய்யை சிவாஜி, கமல் மாதிரி கணக்கில் எடுத்துக் கொள்கிறேன் என சொல்லக்கூடாது. அஜீத்துடன் ஒப்புமை செய்கையில் விஜய் கொஞ்சம் நடிக்கிறார் என்பது பால்வாடி பிள்ளைகளுக்கும் தெரிந்துவிடக்கூடிய செய்தி. அதனால்தான் என்னவோ சிறு பிள்ளைகளிடம் விஜய் விரைவில் அய்க்கியமாகிவிடுகிறார். என் வீட்டில் மட்டுமல்ல, பல வீடுகளில் ஆண் பெண் பிள்ளைகளின் ஆதர்சம் விஜய்தான். குறைந்த பட்சம் நான்கு விஜய் பாட்டுக்கள் மற்றும் பஞ்ச் டயலாக்குகளையாவது குழந்தைகள் அழகாக அவிழ்த்து விடுவார்கள்.

சினிமாவில் விஜய் குறைந்த பட்சம் நல்ல மொழி பேசுகிறார், வசன உச்சரிப்பு துள்ளியமாக இருக்கிறது, நன்றாகவே ஆடுகிறார், உடலமைப்பும் ஃபிட்டாக உள்ளது, கூடுதலாக நடிக்கவும் செய்கிறார். அஜீத்தை எந்த அடிப்படையில் சிறப்பாக சொல்வதென தெரியவில்லை.

இருந்தாலும் சொல்கிறேன்…
அஜீத் அழகாக இருக்கிறார், கலராக இருக்கிறார், கூல் பேபியாக வலம் வருகிறார், இண்டெர்னேசனல் டான் / ஒட்டன்சத்திரம் டான் மாதிரி வசனமும், முகபாவமும் கம்மியாக இருக்கும் கதாபாத்திரத்தில் சிறக்கிறார். வேறு என்னவாகவெல்லாம் சிறக்கிறார் என கமெண்டில் பதிவிடவும்.

இருவரின் ரசிகர்கள் சாதி ரீதியாகவும் பிரிந்துள்ளார்கள் என்பதும் கொடுமை. தென் தமிழகத்தில் முத்துராமலிங்கத்தின் பக்கத்தில் அஜீத்தின் படத்தை போட்டு ப்ளெக்ஸ், பத்திரிக்கை, போஸ்டர் அடிப்பவர்கள் உண்டு. விஜய்யை சாதி மதம் சொல்லி தவிர்ப்பவர்களும் உண்டு. இறுதியாக ஒரு வாதம் வைப்பார்கள். அது “டே! விஜய் கிரிஸ்டிண்டா? அவன் இந்தியனே கிடையாது? ஏன்? தமிழனே கிடையாது” என்பர் கேட்கிற நமக்கு தலை சுத்தும்.

இவை ரசிகர்கள் மத்தியில் உளாவும் புரிதல். விஜய் மற்றும் அஜீத் இருவரும் அவரவர் திறமை, தகுதி தெரியாமலா இருப்பார்கள். அவர்களுக்கு தங்கள் ரசிகர்களை காட்டிலும் தங்களை பற்றி நன்றாக தெரியும். முக்கியமாக அவர்களை வைத்து இயக்கும் இயக்குநர்களுக்கு நன்றாக தெரியும்.

விஜய் தேவையென நினைக்கும் இயக்குநர்கள் அவரிடம் போய் கதை சொல்கிறார்கள். அஜீத் தேவையென விரும்பும் இயக்குநர்கள் அவரிடம் தஞ்சமடைகின்றனர். இருவரிடம் என்ன கிடைக்கும் என தெரிந்தேதான் அவர்களை இயக்குகிறார்கள். இப்போது ’அட்லீ ஒர்ஸ்ட் சிவா பெஸ்ட்’ எனவும் இந்த சண்டை வளர்ச்சியடைத்துள்ளதுதான் காமெடி. அடுத்து இயக்குநர் சிவா விஜய்யை இயக்கவும் வாய்ப்பிருக்கிறது. அவரே அதை பேட்டியில் சொல்லியும் உள்ளார். நம் ரசிக சிகாமணிகள் மூஞ்சியை அப்போது எங்கு போய் வைத்துக்கொள்வர்.?

நேற்று சன் டிவியில் ஒளிபரப்பான மெர்சல் இசை வெளியீட்டில் விஜயை ஓவராக புகழ்ந்து தள்ளினார்கள் டிவிக்காரர்கள். நல்ல மனம் படைத்தவர், தன்னலம் கருதாத தலைவன் என்றெல்லாம் ஸ்லைடு போட்டார்கள். சரி! நல்ல மனதை வைத்துகொண்டு அவர் என்ன தொண்டர் படையோடு போய் ரஷ்யபுரட்சி செய்யவா போறார். படத்துல ஆடிப்பாடி நடிக்கத்தானே போறார். 

நடிகனை நடிகனாக அணுகுங்கள்.  அவன் பிற்பாடு அரசியல்வாதியானால், அரசியலில் அவன் செயல்பாட்டை விமர்சியுங்கள். இப்போதைக்கு ஆட்டத்தை மட்டும் இரசியுங்கள், ஆட்சி செய்ய அழைக்காதீர்கள்.

முதல்ல சண்டை போடுறதை நிறுத்துங்கள். அது அவ்வளவு அறிவுபூர்வமா இல்லை. பாக்குற எங்களுக்கு சகிக்கல.

Saturday 16 May 2020

இணைய சமத்துவம் - Net Neutrality ஒரு Positive பார்வை

இந்தியாவில் சமத்துவம் சாத்தியமா என்றெல்லாம் இனி அங்கலாய்க்க தேவையில்லை என்பதுபோல் வைரலாக ஒரு காணொளி வாட்ஸ் அப்-ல் கண்டேன். Net Neutrality - அதாவது -'இணைய சமத்துவம்' பேசும் காணொளிதான் அது.

உதாரண நோக்கில் அவர்கள் எடுத்துகொண்ட 'மின்சாரம்' எளிதாக சொல்ல வந்ததை புரிய வைத்தது. குளிர்பதன பெட்டிக்கு தனியாக, மின்விசிறிக்கு தனியாக என கட்டணம் வசூலித்தால் என்னவாகுமோ அதுபோல நடந்துவிட்டால் என்னாவது என விளக்கினர்.

இணைய சமத்துவம் என்பது சாத்தியமா என என் மண்டை குடைகிறது. காசு கொடுத்து வாங்குகிற கடைச்சரக்கில் என்ன சமத்துவம் எதிர்பார்க்க முடியும். வாங்குகிற மக்களுக்கு நன்மை குறைந்த விலையில் நிறைந்த சேவை கிடைக்க வேண்டுமாயின் அரசு போட்டியாளர்களை உருவாக்குவதே நல்லது.

சில வருடங்களுக்கு முன்வரை பேசாத நிமிடத்திற்கு முழுவதும் ஒருவர் ஏன் பைசா அழவேண்டும் என்று எந்த வாடிக்கையாளரும் கூக்குரலிடவில்லை. மாறாக போட்டிக்கு வந்த புது ஆபரேட்டர் டாடா டொகோமோ நொடிக்கணக்கை அறிமுகப்படுத்தியது. உடனே காலில் சுடுதண்ணீர் ஊற்றிக்கொண்டு அனைத்து ஆபரேட்டர்களும் நொடிக்கணக்கில் மாறினர். பின்னர் இரு விதமாகவும், அதாவது குறைவாக பேசும் சந்தாதாரருக்கு ஒரு pack-ம், நிறைய கதையளக்கும் சந்தாதாரருக்கு இன்னொரு pack-ம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆக முதலாளிகளுக்கு இடையேயான போட்டி மட்டுமே வாடிக்கையாளருக்கு நன்மை பயக்கும். தெருவில் பத்து கடை இருந்தால்தானே போட்டிப்போட்டுகொண்டு சல்லிசான விலைக்கு தர ஒரு கடையாவது வாடிக்கையாளருக்கு
கிடைக்கும்.

முன் காலங்களில் இன்கமிங்கிற்கு கட்டணமில்லை என ஏர்செல் முந்திகொண்டு அறிவித்ததும் இதே வகையில்தான்.

சரி இன்றைய கதைக்கு வருவோம். ஏர்டெல் net' ம், ரிலையன்ஸ் 'internet.org' ம் தனது நிலையை அறிவித்தபோது ஏன் இத்தனை கூக்குரல். உள்ளபடியே இன்னொரு சூட்சுமம் இதில் உண்டு. இந்த இரு நிறுவனங்களுக்குதான் வாடிக்கையாளர்கள் அதிகம்.VAS மற்றும் Data சேவையை அதிகமாக பயன்படுத்தக்கூடிய வாடிக்கையாளர்கள் ஏர்டெல்லில் அதிகம்.
ஆக இது பாதிப்பை ஏற்படுத்தப் போவது பெரிய கூட்டத்தை. அந்த பெருங்கூட்டம் ஏற்படுத்தியதுதான் அக்கூக்குரல். பெருங்குரல்.

ஒருவர் தான் அதிகமாய் உபயோகிக்கும் தளங்களை பார்க்க தனியாக அதிக விலைகொடுக்க வேண்டியிருக்கும் என்பதும், ஆபரேடர் வழிமொழியும் தளங்களை மட்டுமே பார்க்க இயலும் என்பதே பிரச்சினை. ஏர்டெல் மற்றும் flipkart ஒன்றிணைந்தால் amazonஐ பார்க்கிற நான் நிறைய அழ வேண்டியிருக்கும் என வருந்துவது அவசியமற்றது. ஏனெனில் amazon இன்னொரு ஆபரேட்டருடன் ஒன்றிணையும்.இருக்கவே இருக்கிறது Number portability. பிடித்த ஆபரேட்டரை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். அந்த இன்னொரு ஆபரேட்டர் மூலம் amazonஐ வேகமாகவோ, இலவசமாகவோ பார்க்கலாம். சிம்பிள்.

தற்சமயம் தனியாக குறுஞ்செய்தி pack இருப்பது நாம் அறிந்ததுதான்.அனைத்து ஆபரேட்டர்களுமாய் உத்தேசமாக ரூ.28 முதல் ரூ.31க்குள் விலை வைத்திருப்பர். குறுஞ்செய்தி நிறைய அனுப்புபவர். அந்த pack-ஐ ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இல்லையெனில் வழக்கமான அழைப்பு விலையில் குறுஞ்செய்திக்கு அதிகமாக பணம் செலவழியும். ஆரம்ப காலங்களில் குறுஞ்செய்தி இலவசமாய் மெயின் pack-ல் அறிமுகம் செய்து பின்னர் தனியாக pack ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
நிறைய குறுஞ்செய்தி அனுப்புபவர் அதை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். விலையும் கம்மிதான். இதே மாதிரிதான் STD, ISD pack- களும்.

அதுமாதிரிதான் இணையத்திலும். சமூக வலைதளங்கள் அதிகமாய் உபயோகிப்போருக்கு தனியாகவும், ஷாப்பிங் தளங்கள் செல்வோருக்கு தனியாகவும், தேடலுக்கு தனியாகவும் பேக்குகள் வரலாம். இரு வேறு நிறுவனங்கள் விலையில் வித்தியாசம் காட்டி,குறைத்து வாடிக்கையாளர்களை வசீகரிக்கலாம். ஆக நன்மை மக்களுக்கே. வியாபாரி ரெண்டுபட்டால் மக்களுக்குதான் கொண்டாட்டம்..வியாபாரிகள்தான் அதிகமாய் வரவேண்டும். அரசு அதற்கு வழிவகை செய்தாலே போதும்.

நிற்க.

ஆனால் வியாபாரிகள் ரெண்டுபடுவரா? இப்போதைக்கு இல்லாவிடினும் பின்னர் படுவர்.

6 பெரியண்ணன் நிறுவனங்களின் கூட்டான COAI எப்படியாவது TRAIஐ தன் கையால் ஆட்டுவிக்கும் என்பதே பலரின் கூற்று. ஆகா!என்ன ஒரு தீர்க்க தரிசனம்.

இதையேதாம் மேனாள் தொலைத்தொடர்பு அமைச்சர் அன்று அம்பலப்படுத்தினார். நாம் அவரைத்தான் ஏசினோம். இந்த COAIல் இணையாத புதிய நிறுவனங்களை கொண்டு வந்தார். போட்டிகளை உருவாக்கினார்.அழைப்பு விலை வெகுவாக குறைந்தது. 2Gயை இலவசமாக்குவேன் என சூளுறரைத்தார். யாரும் பாராட்டவில்லை அப்போதும், இப்போதும்.TRAI மற்றும் COAIக்குள்ள உறவை அவ்வளவு எளிதாக யாரும் புரிந்துகொள்ள முடியாது. புரிந்துகொண்டு செயலாற்றியவர் தற்போது வழக்கில் உள்ளார்.

இன்று "அய்யோ பெரிய நிறுவனங்கள் எல்லாம் சேர்ந்துக்கிச்சுனா, சிறு தளங்கள், புது தளங்கள், வலைப்பூ போன்றவை என்னவாகும் என யோசிக்கிற இணைய ஆட்களைதான் மெச்ச வேண்டும். முன் யோசிக்காது போட்டி போட்டுக்கொண்டு அவரை வசைபாடியது இவர்கள்தான்.

ஒரு பேச்சுக்கு, அவர் இருக்கையில் யாரோ ஒரு சிறு ஆபரேட்டர் அன்றே வந்திருப்பின் நம் ஆட்களுக்கு "வலைப்பூ" பேக் ஒன்றை சொற்ப விலையில் அறிமுகப்படுத்தியிருக்க கூடும்.

ஆக! இவ்விசயத்தில் கவலை தேவையில்லை. போட்டிகளை உருவாக்குவதே கொள்முதலுக்கு நன்மை பயக்கும்.

#tail piece: நம் தமிழக மின்சார வாரியம் இன்வெர்ட்டர் வைத்துள்ளோருக்கு அதிக கட்டணம் வசூலிக்க திட்டமிட்டது நினைவிருக்கலாம். அப்படி நடக்க தொலைத்தொடர்புத் துறை ஒன்றும் monopolyயாக இல்லை என்பது நற்செய்தி.
மின்சார வாரியம் தமிழகத்தில் ஒன்று என்றில்லாமல் அதற்கு போட்டியிருந்து, அந்த போட்டி நிறுவனம் "வெறும் குண்டு பல்பு மட்டுமே உபயோகித்தால் யூனிட் 0.10 பைசா மட்டுமே" என விளம்பரம் செய்தால் கசக்கவா போகிறது.
கூடவே தமிழக மின்சார வாரியம் தரமற்று போய்விட்டது எனவே மத்திய தொகுப்பில் இருந்து புதிதாய் மின்சார நிறுவனம் வரப்போகிறது என அறிவிப்பு மட்டும் செய்யட்டும். உடனே தமிழக மின்சார வாரியம் "செல்போன் சார்ஜ் செய்தால் மீட்டர் ஓடாது" என ஆஃபர் கூட தரும்.

இவ்விசயத்தில் புரிதல் இவ்வளவே! சிம்பிள்.


20 ஏப்ரல் 2015


COVID19 - சிறு வேண்டுகோள்

வீட்டில் ஒரு பெண்மணியை என் மனைவி பணிக்கு அமர்த்தியுள்ளார். ஊரடங்கு உத்தரவிற்கு இரு நாட்களுக்கு முன்னர் (கடந்த 21 மார்ச்) தொலைபேசியில் அப்பெண்மணியை அழைத்து தற்காலிகமாக வேலைக்கு வரவேண்டாம் எனவும், நிலைமை சீரானதும், நான் அழைக்கும்போது வந்தால் போதும் எனவும் சொல்லிவிட்டேன். மறுமுனையில் லேசான மவுனம். கால் கட்டானது.
பல வீடுகளுக்கு செல்லும் அப்பெண்மணியிடமிருந்து நமக்கு எதுவும் வந்துவிடக் கூடாது & நம்மிடமிருந்து அப்பெண்மணிக்கும் எதுவும் தொற்றிவிடக்கூடாது என்ற mutual நலம், முன்னெச்சரிக்கை & பயம்தான் காரணம்.
மவுனம் கலைந்து அப்பெண்மணி நொடிகளில் என்னை அழைத்தார். "அண்ணே! இந்த மாசம் மீதமிருக்குற நாளுக்கு சம்பளம் பிடிக்க மாட்டீங்கள்ல. பையன் கல்யாணத்துக்கு சீட்டு கட்டுறேன். அதான்."
"அம்மா! நான்தானம்மா உங்களை வர வேணாம்னு சொன்னேன். சம்பளமெல்லாம் பிடிக்க மாட்டேன். எப்பவும் போல அந்த தேதியில் வாங்கிக்கங்க." என்றேன்.
"இல்லண்ணே. இப்ப எந்த வீட்டுக்கும் போகலை. என் வீட்டுக்காரர் வேணாம்னுட்டாரு. பக்கத்து வீடுன்னால உங்களுக்கு மட்டும் வரேன். கையை கால நல்லா கழுவிட்டு வந்து பாத்து கொடுக்கறேனே?" என கெஞ்சும் குரலில் கேட்டார்.
எங்கே சம்பளம் பிடிக்கப்பட்டு விடுமோ?, இந்த மாதத்தோடு வேலையை விட்டு நிறுத்தி விடுவார்களோ? என்ற பயம் இருந்தாலும், இந்த சூழ்நிலையிலும் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி விடுப்பு எடுக்கவும் மனம் ஒப்பாது, எளிய மனிதர்களுக்கு உரிய நேர்மையுடன் "பணிக்கு வந்து, சம்பளம் பெற்றுக்கொள்கிறேன்" என்று சொல்லாமல் சொன்னார்.
எனக்கு சங்கடமாக போய் விட்டது. "அம்மா! ஒன்னும் பிரச்சனையில்லை. உங்க வீட்டுக்காரர் சொல்றதை கேளுங்க. எங்கயும் வெளிய போகாதீங்க. உடம்பை பாத்துக்கோங்க. சம்பளம் வந்து வாங்கிக்கங்க. கொஞ்ச நாள் கழிச்சு மறுபடியும் வாங்க" என்றேன்.
"சரிங்கண்ணே! அப்போ 1ம் தேதி வரேன்" என்று போனை உடனே கட் செய்தார்.
பதறிப்போய் மறுநொடி நான் அழைத்து "அம்மா! இது எப்போ சரியாகும்னு தெரியலை. அடுத்த மாசமா, அதுக்கு அடுத்த மாசமான்னு கூட உறுதி தெரியலை. ஒண்ணும் கவலைப் படாதீங்க. ஏப்ரல் மாசம் முழுக்க வர முடியாம போனாலும் , சம்பளத்தை பத்தி கவலைப் படாதீங்க. அந்த மாசத்துக்கும் தந்துடறேன்" என்றேன்.
இது பெரிய மனிதாபிமான மிக்க செயலோ, பெருமைப்படும் அளவுக்கான செயலோ கிஞ்சித்தும் இல்லை. எனக்கு அப்படி தோணவும் இல்லை. நான் உள்ளபடியே என்னை தான் நினைத்து கொண்டேன்.
நம் முதலாளி நமக்கு எப்படி படியளப்பாரோ? என்ற எண்ணம் வந்து போனது. அவ்வளவுதான். இப்போது முறையற்ற, அமைப்பு சாரா தொழிலாளர்களின் நிலை இதுதான்.
இன்னும் கூட யாரோ ஒரு வயதான பெரியவர் ஒண்ணுக்கு ரெண்டாக டிவிஸ்50ல் மூடையை கட்டிக்கொண்டு விரைகிறார். பால்காரர் பறக்கிறார். தண்ணீர் வண்டி ஓடுகிறது. மளிகை கடையில் அண்ணாச்சி அமர்வது பெரிதல்ல. பொட்டலம் கட்டும் பையன், சூப்பர் மார்க்கெட்டில் பில் போடும் பெண் வேலைக்கு இன்றும் வந்து போகிறார்கள்.
ஏன் வரவேண்டும்.?
வயிறுதான் காரணம். வேறென்ன?
எளிய மக்களை பற்றிய கவலை இல்லாமல், எனக்கென்ன? வந்தது என கைத்தட்ட சொல்கிற பிரதமர் இருக்கிற இந்நாட்டில் வேலைக்கு பணியாளர்களை அமர்த்தியிருக்கும் சிறு, குறு, பெரு முதலாளிகளே! உங்களுக்கு என் பணிவான வேண்டுகோள்.
1. அரசாங்கம் தானே லீவு கொடுத்திருக்கு. "வராத நாட்களுக்கு நான் சம்பளம் தரமாட்டேன்" என தயவு செய்து உங்கள் அற்ப புத்தியை உங்கள் பணியாளர்களிடம் காட்டாதீர்கள். அவர்களும் வேலைக்கு வரமாட்டேன்னு சொல்லை. நிலைமை ரொம்ப சீரியஸ். வந்து உங்களுக்கும் பரவிடுச்சுன்னா. அதுக்குதான்.
2. அலுவலகத்துக்கு விடுமுறை விட்டுட்டோமே!. Work from Homeனுல்லாம் சொல்றானுங்களே? அந்த மாதிரி என்ன வேலை இவனுங்களுக்கு கொடுக்குறது? வீட்டுல சும்மா இருப்பானுங்களே? சம்பளம் கொடுக்கணுமே?" என அப்பப்போ கூப்பிட்டு உங்க Profit & Loss staementஐ ஒப்பிக்காதீங்க.
3. நீங்க எப்படி சம்பளப் பணம் குடுக்குறீங்களோ? அதே மாதிரி அவங்க தங்கள் உழைப்பை உங்களுக்கு கொடுக்குறாங்க. அமைப்பு சாரா தொழில்கள்ல நேரங் காலமெல்லாம் இல்லை. நீங்க கொடுக்குறத காட்டிலும் அதிகமாதான் உங்களுக்கு அவங்க உழைச்சிருப்பாங்க. அது மட்டுமில்லாம நம்ம இந்திய பணியாளர்களுக்கே உள்ள முதலாளி விசுவாசம், மரியாதை உங்களுக்கு எக்ஸ்ட்ரா கிடைச்சிருக்கும். அதுக்கு இப்ப ஈடு தர்றதா நினைச்சுக்கோங்க.
4. அதான் ரேஷன் கடையில 1000 ரூபா தரான்ல. நாம் 1000ஐ குறைச்சு தருவோம்னு எச்சக்கலையா மாறிடாதீங்க. ப்ளீஸ்.
5. எல்லாத்துக்கும் மேல. பலரும் தங்கள் தகுதி, திறமைக்கு ஏத்த மாதிரி வேலையில் இல்லை. தங்கள் இயலாமையால தங்கள் தகுதியை குறைச்சுக்கிட்டு துறை ஈடுபாடு கருதியும் பலர் பலரிடம் பணிபுரிகிறார்கள். வாய் விட்டு சம்பளம் கேட்க துணிவில்லாதவர்களும் கூட இருக்கிறார்கள். அவர்களை வஞ்சிக்கிற தருணம் இதுவல்ல.
- தம்பி பிரபு
30 மார்ச் 2020

இப்போதாவது கை கழுவுங்கள்.! ராம்போ மனநிலையை.!

சிறு வயதில் Rambo படம் பார்த்துவிட்டு நானும் என் தம்பியும் ”ராம்போ தான்டா இந்த உலகத்திலேயே அனைவரையும் வெல்லக்கூடிய சக்தி படைத்தவன்” என்று உண்மையிலேயே நம்பினோம். சில்வஸ்டர் ஸ்டாலோன்-லாம் அப்போது தெரியாது. ராம்போதான்.
அதற்கு முன் எங்கள் தர வரிசையில் ரஜினி-1, கமல்-2, விஜயகாந்த்-3, அர்ஜுன்-4.... என்று வகைப்படுத்தி வைத்திருந்தோம். அப்போதுதான் ஒரு படம் வந்தது. அதில் வந்தவர் வித்தியாசமாக சண்டை போட்டார், அதுவும் நிறைய பேசினார். பேசிக்கொண்டே எதிரிகளை புரட்டி எடுத்தார். உடம்பும் மற்றவர்களை காட்டிலும் கொஞ்சம் பூசினாற்போல இருந்தது. "யார்றா இவன். தாடி எல்லாம் வச்சு காட்டானா இருக்கான். செம அடி அடிக்கான்" என்று அவனை கண்டு மிரண்டு சற்று எங்கள் கொஞ்ச காலத்திற்கு தரவரிசையை மாற்றி போட்டோம்.
டி.ராஜேந்தர் தாண்டா உலகத்திலேயே ஸ்ட்ராங். அவனை அடிக்க யாராலயும் முடியாது என்று நாங்கள் ஒரு முடிவுக்கு வந்திருந்தபோது தான் என் அப்பா மதுரை தங்கம் தியேட்டரில் ராம்போ படத்துக்கு அழைத்து சென்றிருந்தார்.
அது RAMBO First Blood part II.
மிஷின் கண் சகிதம், ராம்போவின் உடற்கட்டு, ஆர்ம்ஸ் எல்லாம் பார்த்துவிட்டு அதிர்ந்து போனோம். படம் பார்த்துவிட்டு வெளியே வந்த மறுகணம் டி.ராஜேந்திரை டிஸ்மிஸ் செய்தோம். பின்னர் ஏதோ ஒரு நாள் ஜாக்கியை பார்த்துவிட்டு மாடியில் இருந்து குதித்து காலுடைந்து போனோம்.
இதுபோல அந்த பதின்ம வயதில் யாரொவர் செய்யும் ஆக்ரோஷம் நிறைந்த சாகசங்கள் நமக்குள் பிடித்துப்போகும். ஆனாலும் வயதும், அறிவும் நமக்கு சில உண்மைகளை மெதுவாக விளக்கும்.
இப்போது எனக்கு சண்டை படங்களே பிடிப்பதில்லை. சாதாரண குடும்ப கதைகளில் வரும் சண்டை காட்சிகள் கூட நொடியில் அலுத்துவிடும். ”சண்டையை ஓரங்கட்டி வச்சுட்டு பேசுங்கடா!” என்று உள்ளுக்குள் வசைபாடுவேன்.
ஆனால் அந்த வயதில் அப்படியில்லை. அவரவர் மனதில் அவரவருக்கான பல ஹீரோக்கள். சூடேறும். வயது ஏற ஏற கொஞ்சம் மெச்சூரிட்டி வந்துடும். எனக்கு கொஞ்சம் முன்னமே வந்துருச்சு என்பேன். 11வது படிக்கிறபோது என் தம்பியை ஒருவன் அடித்துவிட, நான் அவனை திருப்பி அடித்துவிட்டேன். பின்னாடியே அவன் அண்ணன் என்னை அடிக்க வர நான் அவனிடம் தப்பிக்க 1 மணி நேரத்துக்கும் அதிகமாக பேசினேன்..பேசினேன்..பேசினேன். விருட்டென்று எழுந்த அவன் ”இப்ப என்னடா பண்ணச் சொல்ற? விசு மாதிரி நொய் நொய்னு பேசுற” என பொசுக்கென்று சொல்லிவிட்டு போய்விட்டான்.
அதுமுதல் எல்லா பிரச்சனைக்கும் பேச்சுதான். கல்லூரியில் ஒரு தகராறில் இரு தரப்பினரை சமாதானம் செய்து வைக்கப்போய் நான் புறா பிரியாணி ஆன கதையெல்லாம் கூட உண்டு. கல்லூரி நண்பர்கள் என்னை “பெருசு! கல்யாணம் பண்ணி ஃபர்ஸ்ட் நைட்ல எப்படி.? வெறும் பேச்சுதானா?” என்று கூட கிண்டலடிப்பதுண்டு.
இப்போது அப்படியில்லை. பேச்சையும் குறைத்துவிட்டேன். நிறையவே ரிசர்வ் கூட ஆகிவிட்டேன். என்னை காட்டிலும் திறமையும் அறிவுமுள்ள பலரை சந்தித்ததாலோ என்னவோ இப்போதெல்லாம் கிட்டத்தட்ட Inferior ஆகிவிட்டேன். இப்போதும் கூட சண்டையில், வன்முறையில் எனக்கு விருப்பமே இல்லை. ”பேசிக்கலாம்” என்பது எத்தனை அறிவு பூர்வமான அணுகுமுறை. யாருக்கும் இழப்பில்லை.
என்னுடன் பணியாற்றிய தம்பி ஒருவர் ஒசாமா பின் லேடன் குறித்த வீரக்கதைகளை அடிக்கடி சொல்லி என்னை கிலிப்படுத்துவார். ஆஃப்கனில் ஒரு சிறுவன் லாஞ்சர் மூலம் மேலே செல்லும் விமானத்தை தாக்குகிற ஒரு காணொளியை காட்டி பெருமிதம் கொள்வார். எனக்கு அது பெருமிதமாக இருந்ததே இல்லை. அந்த லாஞ்சர் சிறுவனின் சிவந்த கன்னத்தை நான் தொட்டு பார்க்க வேண்டுமே என்ற ஆவல்தான் அப்போது மேலிட்டதேயன்றி அந்த சாகசம் பெரிதாக படவில்லை. பின்னர் ஆஃப்கனில் ஒசாமாவுக்கு நடந்தது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அந்த தம்பிக்கு நடந்ததை பிறகு சொல்கிறேன்.
விசயத்துக்கு வருகிறேன்.
நமக்கு தெரிந்த வீரர் ஒருவருண்டு. அவரை பற்றி பேசாத ஆளில்லை. அதில் நிறைய பேர் அவரோடு உடனிருந்து, உடன்பட்டு, பயணபட்டு, போராடி, தியாகம் பல புரிந்து அவரவர்க்கு ஒரு வரலாறு & கதை வைத்திருக்கிற மனிதர்கள். உண்மை கதைதான். ஆனாலும் பல உண்மைகளை மறைத்த கதையும் அது.
இப்போதிருக்கிற பிள்ளைகளுக்கு அவரை பற்றிய வீர தீர துப்பாக்கி சாகசங்கள் கதை கதையாக ஊட்டப்படுகிறது. அவர்கள், அதை எழுதி வைத்த புத்தகங்களில், சில காணொளி காட்சிகளில் பார்த்து ரசிக்கிறார்கள்.
அடுத்து..
ரசிக மனது தானே.? வழக்கம் போல கொண்டாட ஆரம்பித்து விடுகிறது. தலைவனாக்கி அழகு பார்க்கிறது. அதில் ஏதும் தவறில்லை தான்.
ஆனால் அந்த வெற்றி வீரராக பட்டவர் இப்பிள்ளைகள் மனதுக்குள் நுழைந்த மாதிரி, இவர்களின் வாழ்க்கையில் எந்த ஒரு தருணத்திலும் நுழைந்தவர் இல்லை.. இவர்களின் தாய் தந்தையர் வாழ்க்கையை அந்த வீரர் மாற்றி அமைத்தாரா? இல்லை. அவர்களின் வாழ்வாதாரத்தை பெறுக்கிட ஏதும் செய்தாரா? இல்லை. இவர்களது கல்விக்கும், வாழ்வின் ஏற்றத்திற்கும் ஏதும் வழி காட்டினாரா? அதுவுமில்லை. தனக்கு பின்னால் ஒட்டிக்கொண்டிருக்கும் பட்டத்திற்கும், இவர்களில் பலரது வங்கி கணக்கில் மாத கடைசியில் விழும் ஐந்திலக்க வரும்படிக்கும் ஏதாவது ஒரு வகையில் உதவினாரா? எதுவுமில்லை. அவ்வாறு ஏதாவது நடந்து இருந்தால் யாராக இருந்தாலும் சொல்லலாம்.
ஆனாலும் அவர் சினிமா ராம்போ போல, ரஜினி போல அல்லது உண்மையான புரட்சி வீரன் பிடல் காஸ்ட்ரோ போல இவர்கள் மனதுக்குள் விதைக்கப்பட்டுள்ளார். ஒரு மாவீரராக, தலைவனாக.!
அந்த வீரர் யாரென பிறகு சொல்கிறேன்.
நாம் பிடல் காஸ்ட்ரோவுக்கு வருவோம். தமிழ்நாட்டில் பிடல் பற்றி எல்லோருக்கும் கொஞ்சம் தெரியுமென்றாலும் கூட இங்கு அவருடைய தோஸ்த் சே குவாரா-வைத்தான் அதிகம் தெரியும். அதாவது அவரவர் டீ.சர்டில் படமாக இருப்பது மற்றவர்கள் கண்ணுக்கு தெரியும். அவ்வளவுதான் தெரியும். அவரை படித்திருக்கிறார்களா? அவர் வரலாற்றை அறிந்து வைத்திருக்கிறார்களா என்றால் பெரும்பாலும் இருக்காது. ஆனால் அவர்கள் வைத்திருந்த துப்பாக்கி இவர்களுக்கு பிடிக்கும். பிடலும் சேவும் கம்யூனிஸ்ட் எனில் நம் டிசர்ட்-காரர் நெற்றியில் திலமிட்டு வெற்றிவேல் வீரவேல் என ஜாதி மாநாடு கூட்டுபவராக இருப்பார். அவ்வளவு முற்போக்கு. பேசுவதெல்லாம் தற்சார்பு, சட்டையில் IMPORTED தலைவர்.
ஆக! இதெல்லாம் ராம்போ மனநிலையின் தொடர்ச்சிதான். அது ஒரு வெளிக்காட்ட இயலாத உள்ளுணர்வு. சிறு வயதிலிருந்தே மூளைக்குள் டிடெர்ஜெண்ட் செய்யப்பட்டது. வாசிங் மெஷினே கூட ரிப்பேராகி உடைப்பட்டு போனாலும், டிடெர்ஜெண்ட் ஒட்டிக்கொண்டிருக்கும்.
ஆக! ராம்போ, வீரர், சே போன்றோர்களை பலரும் தங்கள் அமானுஷ்ய கனவுகளுக்கு நாயகனாக வரித்துக்கொண்டு வாழ்கிறார்கள். மேற்படி கதாநாயகர்கள் எப்போதாவது நேரில் நம்மோடு நம் வாழ்க்கையில் கலந்து நமக்கு உதவியாக, நமக்கு நல்லது செய்தார்களா? செய்வார்களா? என்றால் இல்லை. கண்டிப்பாக இல்லை. அவ்வாறாயின் அவர்களை புறந்தள்ளுவதுதானே அறிவுடைமை.
சரி! யார் தலைவர்கள்.?
சினிமாவில் முன்பாதியில் ஒடுக்கப்பட்ட கதாநாயகன் பின்பாதியில் யாரோ ஒருவரின் துணைகொண்டு வீறுகொண்டு எழுவானே அதுபோல ஒரு துணை இப்பிள்ளைகளுக்கு உண்டு. ஆனால் வீறு கொண்டெழுந்து நட்டப்பட்டு உட்காருவது போல் அல்லாது விவேகம் கொண்டு எழ அவர்களுக்கு அந்த துணை சொல்லித் தந்திருக்கிறது. ஒரு துணை அல்ல. பல துணைகள். வெறுமனே துணைகள் அல்ல. அவர்கள் உண்மையான தலைவர்கள்.
முன் பத்தியில் விசு மாதிரி கேள்விகள் கேட்டேனே.? மறுபடியும் கேட்கிறேன். இந்த தலைவர்கள் உங்கள் தந்தையின் பொருளாதார மேம்பாட்டிற்காக துணை புரிந்துள்ளார்களா? ஆம். ஏதாவதொரு வகையில் உங்கள் குடும்பத்திற்கு உதவியிருக்கிறார்களா? ஆம். உங்களின் கல்வி, வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம், முன்னேற்றம், வளர்ச்சி அனைத்துக்கும் துணை புரிந்திருக்கிறார்களா? ஆம். தங்களின் இழிநிலையில் இருந்து மேல்நிலைக்கு அந்த தலைவர்கள் உங்களை உயர்த்தியிருக்கிறார்களா? ஆம். எல்லாவற்றிற்கும் ஆம்.
இந்திய பெருநாட்டிலே எந்த ஒரு குடிமகனுக்கும் இல்லாத கல்வி, அறிவு வளர்ச்சி, பகுத்தறியும் தன்மை, சுயமரியாதை, சுகாதாரம் இவனுக்கு வாய்த்திருக்கிறது. அதெல்லாம் அந்த தலைவர்கள் எவ்வித கைமாறும் கருதாமல் நமக்கு தந்துவிட்டு போன நன்மைகள். உண்மையான தலைவர்கள் அவர்கள்தான்.
அப்படியெனில் இந்த பிள்ளைகள் யாருக்கு உண்மையாகவும், நன்றியுணர்வோடும் இருக்க வேண்டும்.? நன்றியுணர்வு இல்லாவிட்டாலும் கூட தன்னை ஆளாக்கிய தலைவர்களை இழிவுபடுத்தாமலாவது இருத்தல் வேண்டுமல்லவா? அப்படி இழிவு படுத்தும் நிலைக்கு இளம்பிள்ளைகள் ஏன் அப்படி ஆனார்கள்.? யார் சொல்லி? அவர்களை நன்றியுணர்வற்ற வெறும் ராம்போ ரசிக குஞ்சுகளாக யார் ஆக்குகிறார்கள்.? இந்த இளம் பிள்ளைகள் வாழ்க்கையில் அவ்வாறு யார் ஊடுறுவுகின்றனர்.?
என்னுடம் பணிபுரிந்த அந்த தம்பி ஒசாமாவை கைவிட்டபின் நாம் தமிழரை சிலாகித்தான். தன் பொருளையெல்லாம் செலவழித்தான். பின் மே 17 என்ற ஓட்டை பேருந்தில் ஏறி பாதி தூரம் போனான். பின் தன் வாழ்க்கை தொலைந்து எங்கோ தொடர்பற்று போனான். இன்று தொடர்பில் இல்லை.
இன்னபிற ரசிகக் குஞ்சுகள் நிறைய அந்த மாவீரரை ரசிக்கிறார்கள். அந்த வீரரின் பழைய வெற்றிகளை கதைத்து தள்ளுகிறார்கள். துவக்குகளையும், பீரங்கிகளையும் காணொளிகளில் கண்டு வீர வசனம் பேசுகிறார்கள். அங்குள்ள உண்மைத்தன்மை, மண், மக்கள், வரலாறு எல்லாம் இவர்கள் அறிந்திருக்கவில்லை. அட! அவர்கள் நம் மண்ணின் வரலாறையே படிப்பதில்லையே. பிறகெப்படி.? அப்படித்தான்.
நேரடியாகவே அந்த வெற்றி வீரனை சொல்லிவிடுகிறேன்.. என் பெயர் தாங்கியவர் தான். அவர் நம் மேதகு தலைவர் பிரபாகரன் அவர்கள்தான்.
பிரபாகரனை கண்டவர் விண்டிலரில்லை விண்டவர் கண்டவரில்லை. இந்த கண்டவர் விண்டிலரில் இருப்பவர்கள் எல்லாம் பெரும் மரியாதைக்குரியவர்கள். தங்கள் வாழ்வையே அவர்களுக்கு ஒப்புக்கொடுத்தவர்கள். பின் சமீபமாக யதார்த்த நிலையை அறிந்துகொண்டு அமைதி காக்கும் குணம் உள்ளவர்கள். எல்லா நேரங்களில் அப்படி இருக்கிறார்களா என்றால் இல்லை. அதுதான் சோகம்.
பின்னவர்கள் ஒருகாலத்தில் அவர்கள் சொல்லி கேட்டவர்கள் தான். ஆனால் கை மீறி போய்விட்டார்கள். காணாமலே அளக்கும் கதை பொறுக்கிகளாக, விசம் பரப்பும் கிருமிகளாக மாறிப் போனார்கள். அந்த பாவத்துக்குதான் அவர்களும் இவர்களை தாக்குகிறார்கள். இவர்களும் வாய் மூடி கிடக்கிறார்கள்.
நம் பிள்ளைகளும் பாவம் அவர்களிடம் சிக்குண்டு கிடக்கிறார்கள். அவர்களுக்காக அத்தனையும் செய்த உண்மையான தலைவர்களுக்கு எதிராக அவர்கள் திருப்பட்டுள்ளார்கள்.
வெற்றியை மட்டுமே நமக்கு அள்ளி அள்ளி தந்துவிட்டு சென்று இங்கிருக்கும் தலைவர்களையும் அவர்தம் வரலாறு, கொள்கைகளை எல்லாம் சொல்லித்தருவதை விட்டுவிட்டு தோல்வியடைந்த ஒரு வீரனை பற்றிய கதை, ஒரு தத்துவம் அவர்களுக்கு ஊட்டப்படுகிறது.
இதை உடைக்க வேண்டாமா? அவர்களுக்கு புத்தி புகட்ட வேண்டாமா? நல்வழிப் படுத்த வேண்டாமா? உன் வழி தோல்வியில் முடியும் என சொல்லித் தர வேண்டாமா? அது தோல்வியுற்றவனின் கதை. மாண்டு போனவனின் கதை என்று எச்சரிக்கை செய்ய வேண்டாமா? சண்டை செய்தால் செத்துப் போவீர்கள். பேசி பேசி அரசியல் பழகுங்கள் என நல்வழிப் படுத்த வேண்டாமா?
அதை செய்கிறவர்கள் திறம்பட செய்யும்போது ஏன் பலருக்கும் பதட்டம். இது எப்போதும் நடந்துகொண்டிருக்கு சண்டை. எப்போதாவது நின்று விடும். நாம் ஒதுங்கியிருப்போம் என இருக்கக்கூடாதா? இதில் சமீபமாக உலக யதார்த்த நிலையை அறிந்தவர்கள் ஏன் பதட்டமடைய வேண்டும்.?
அந்த நாட்டிலேயே அவர்கள் அவரை மறந்து புது வாழ்க்கைக்கு மாறி விட்ட பிறகு நாம் ஏன் இன்னும் காணாததை பிடித்து வைத்துக்கோண்டு நோக வேண்டும். நீங்கள் சொல்லத் தயங்கிய, விடுபட்டு போன கதைகளில் சிலவற்றை சொல்லி, மறுத்து, புரிய வைத்து, புத்தி புகட்டி அவர்களை இழுத்துக் கொண்டு வருபவர்களுக்கு ஏன் தேவையில்லாத அறிவுரை வழங்க வேண்டும்? ”உங்கள் வாக்கு வங்கி கவனம்!” என ஏன் மிரட்டல் விட வேண்டும்.
தக்க சமயங்களில், கைகூடி வந்த பொழுதுகளிலெல்லாம் எதிரில் நின்றுகொண்டு இதே மிரட்டலை விட்டு விட்டு இப்போது உடனிருந்தும் இதே தானா?
யாருக்கு உங்கள் அறிவுரை தேவை? யாருக்கு உண்மையை விளக்கி தெளிவுபடுத்திட வேண்டும் என்று இப்போது கூடவா உங்களுக்கு தெரியவில்லை.? இன்னும் கூடவா மூளைச்சலவை டிடெர்ஜண்ட் உங்களோடு ஒட்டிக்கொண்டு இருக்கிறது.?
கைகழுவுங்கள். ஒன்றும் குடி முழுகி விடாது. உடைத்து போடுங்கள் உண்மையை. நமக்கு நம்மை ஆளாக்கிய தலைவர்கள்தான் தேவை. எப்போதும் என்றென்றும்.
தம்பி பிரபு
8/5/2020

Monday 16 April 2018

கருப்புக் கொடியும் காவி வீரரும்


சமீப காலங்களில் எப்போதும் கண்டிராத ஒரு மிகப்பெரிய தன்னெழுச்சியை தமிழகம் கடந்த 12ம் தேதி கண்டிருக்கிறது. மத்திய மோடி அரசுக்கெதிரான கருப்புக்கொடி காட்டும் கருப்பு தினம் மக்களின் ஏகோபித்த ஆதரவோடு வெற்றி பெற்றுள்ளது எனலாம். கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ வசதி, உள்நாட்டு உற்பத்தி என அனைத்திலும் முன்னேறிய மாநிலத்தில் போராட்டமும், புரட்சியும் சாத்தியமில்லை என்பதை பொய்ப்பித்து தமிழகம் அதில் விதிவிலக்கு என நிரூபித்து இருக்கிறது.

சமீபத்தில் நாம் கண்ட மக்கள் எழுச்சி என்பது ஜல்லிக்கட்டு போராட்டம், நீட்டுக்கு எதிரான அனிதாவின் மரணம், அதற்கு பிறகு தற்போது நடந்தேறிய காவிரிப் பிரச்சனை தொடர்பான எழுச்சி. ஜல்லிக்கட்டு போராட்டம் மாநில அரசின் முழு ஒத்துழைப்பால் நடந்தேறிய ஒன்று. அரசு அப்போராட்டத்தை ஒடுக்க நினைத்த போது ஒரு சில நிமிடங்களில் அப்போராட்டம் ஒடுக்கப்பட்டது.  அனிதாவின் மரணத்திற்கு பிறகு உணர்ச்சி கொந்தளிப்பில் ஒரு ஒருமித்த குரல் எழுந்தது. எழுந்த வேகத்தில் அது மறைந்தது. இப்போது அரசே நீட் பயிற்சியை நடத்துகிறது திமுக, விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம் தவிர வேறு யாரும் அதை எதிர்க்கவில்லை. ஆனால் தற்போது நடந்தேறிய காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடந்த பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டம் வலிமையாகவும், நேர்த்தியாகவும் நடந்தேறிய புரட்சி என கூறலாம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச்சொல்லி ஆறு வார கால கெடுவோடு நீதிமன்றம் உத்தரவிட்டது. பரீட்சைக்கு படிக்காமல் கடைசி நேரத்தில் பிட்டு பேப்பரை கிழித்துகொண்டு போகும் மக்கு மாணவனை போல் கடைசி நாளில் போய் அருஞ்சொற்பொருள், பொழிப்புரை, தெளிவுரை கேட்கிற அதிமேதாவி மத்திய அரசை நாம் பெற்றிருக்கிறோம். விழிப்புணர்வு உள்ள ஒவ்வொருவருக்கும் தெரியும் மேலாண்மை வாரியம் அமைக்க தற்சமயம் யாரிடம் பொறுப்பும் அதிகாரமும் இருக்கிறதென. விழிக்காது, வேண்டுமென்றே தூங்குபவர்களை நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. காவிரியில் அபரிதமாய் தண்ணீர் வருகையில் சிம்பு ஸ்டைலில் ஒரு டம்ளர் தண்ணீரை அள்ளித் தெளித்து அவர்களை தெளிய வைப்போம்.

சரி! விழிப்புணர்வு பெற்றவர்கள் எல்லோரும் போராடுகிறார்களா என்றால் ஆம்! போராடுகிறார்கள் என்பதுதான் என் பதில். அவரவருக்கு தெரிந்த வகையில் அவர்கள் போராடுகிறார்கள். டீக்கடையில் நின்றுகொண்டு காவிரி பிரச்சனையை பற்றி நான்கு பேரிடம் கமெண்ட் அடிப்பவனும் போராளிதான். மறுப்பதற்கில்லை. பொதுவாகவே சிலரது போராட்டம் பக்குவப்பட்டதாகவும், சிலரது போராட்டம் அறிவுபூர்வமானதாகவும், சிலரது போராட்டம் கவனத்தை விரைவில் ஈர்க்கும் வகையிலும், சிலரது போராட்டம் சிறுபிள்ளைத்தனமாகவும், சிலரது போராட்டம் உணர்ச்சி பூர்வமாகவும்,  சிலரது போராட்டம் கொடூரமான காமெடியாகவும் இருக்கும். இருந்தது.

களத்திலும், சமூக ஊடகங்களிலும், வலைதளங்களிலும் பல வழிகளில் முன்னெடுக்கப்படும் தற்கால போராட்டங்கள் முன்னெப்போதையும் விடவும் வலிமையானவையாகவும், வீரியம் மிகுந்தவையாகவும் மாறிவிடுகின்றன.

ஐபில் எனும் உணர்ச்சிக் கொந்தளிப்பு
உள்ளபடியே ஐபில் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக சில அமைப்புகளால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் பெருமளவு கவனத்தை ஈர்த்தாலும் அது எதிர்மறையான கவன ஈர்ப்பாகவும், முகஞ்சுழிப்பையுமே ஏற்படுத்தியது. நாங்கள் போராடுகிறோம், நீங்கள் எங்களோடு நிற்காமல் கிரிக்கெட் பார்க்க போகிறீர்களா? என நம் மக்களையே எதிரியாக்கி அவர்களோடு சண்டையிட்டுக்கொண்ட போராட்டம் அது. மைதானத்திற்கு உள்ளே சென்ற நாம் தமிழர் கட்சியினர் யாரோ வெளிநாட்டு கிரிக்கெட் வீரருக்கு ஒரு ஜோடி செருப்பை பரிசாக தூக்கி விசிவிட்டு வந்த காட்சி அருவெறுப்பை உண்டு பண்ணியது. நமக்கு யார் எதிரி, யாருக்கு எதிராக நாம் காட்டமாக யுக்திகளை வகுக்கவேண்டும் என்ற புரிதலற்றவர்களின் தலைமையில் உருவான போராட்டம் அது. அந்த போராட்டத்தை யார் யார், எந்தெந்த கட்சிகள் முன்னெடுத்தன என்பதை குறிப்பிட்டு சொல்லாமல் உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகிறேன். அந்த கட்சியின் முக்கியஸ்தர்கள் பேசும் பேச்சை கவனியுங்கள். ’நாங்கள் மட்டும் போராடுகிறோம், நீங்கள் எங்களோடு கைகோர்க்க மறுக்கிறீர்கள், நீங்கள் ஏன் மகிழ்ச்சியை கொண்டாடுகிறீர்கள் என தங்கள் விரக்தியை காட்டுவது, மற்றவர்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்துவது, தமிழன் ஒன்று சேர மறுக்கிறான் என்று சொல்லும் சீமான், அமீர் போன்றவர்கள் பிரதான எதிர்கட்சிகளோடு ஒன்றுசேர்ந்து போராடாமல், அவர்களை எல்லாவற்றிற்கும் குற்றம் சாட்டி கொண்டே இருப்பது, அவர்கள் மட்டுமே புரட்சிக்கு குத்தகைதாரர்கள் போல இயங்குவது என ஒரு தான் தோன்றித்தனம் தெரிகிறது.

மக்கள் வாழ்வுரிமை கட்சியினர் டோல்கேட்டை உடைத்தபோது பலரும் அச்செயலை பாராட்டினர். உணர்ச்சி கொந்தளிப்பில் நிகழ்ந்த அச்செயல் நம்மால் புரிந்துகொள்ளக்கூடியதுதான். அதன்பின் நிதானமான முறையில் ஐபில் எதிர்ப்பை காட்டிய அக்கட்சியனரை விட்டுவிடலாம். ரஜினியின் புதிய கட்சியை சேர்ந்தவர்களின் எதிர்ப்பும் கூட பெரிதாக கவனிக்கப்படவில்லையே தவிர மெச்சக்கூடியதுதான். ஆனால் நாம் தமிழர் மாதிரியான ஃபாசிஸ்டுகள் அரங்கேற்றிய வன்முறையான நம் மக்களையே அடிப்பது, சட்டையை கழட்ட சொல்வதெல்லாம் உச்சபட்ச பைத்தியக்காரத்தனம். வீசிய செருப்பை ஒரு வெளிநாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர் எடுத்து பார்த்தபோது நாம் வெட்கிப்போனோம். கூச்சமாக இருந்தது.

சிம்பு எனும் சிரிப்பு வெடி
சிம்புவுடன் ரஜினி, கமலையும் இந்த சிரிப்பு வெடியில் நாம் சேர்த்து கொள்ளலாம். வெறுமனே அறிக்கையை (வெற்று அறிக்கை) மட்டும் கொடுத்துவிட்டு அவர்களை சார்ந்தவர்களை உசுப்பேற்றிவிட்டு தாம் போய் வீட்டுக்குள் பதுங்கி கொள்வது என்ன வகை நாகரீகமான யுக்தியென தெரியவில்லை. தீர்ப்பை மதித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டியது மத்திய அரசு. எனவே இப்போது மத்திய அரசை வலியுறுத்துவது என்பது நீண்ட கால போராட்டத்திற்கு பிறகான இறுதி கட்டம். இதை பற்றிய அறிவுகூட கிஞ்சித்தும் இல்லாமல் கர்நாடக மக்கள் எல்லாம் கூட்டமாக  சென்று அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பதுபோல டம்ளர் தண்ணியை கேட்டு வாங்கி குடிக்கும் புரட்சி என்பது சிம்புவின் உச்சபட்ச காமெடி. அதில்கூட சிம்பு போய் கேட்டு வாங்கி குடிக்க மாட்டார் போல. யாராவது வாங்கி குடித்துவிட்டு அதை வீடியோவாக ஹேஸ்டாக் போட்டு இணையத்தில் பதிவேற்ற வேண்டுமாம். இந்த போராட்டத்தை பீப் சாங் அளவுக்கு தரப்படுத்தியிருக்கும் அவரது அறிவை மெச்சுவோம். கூடுதலாக அவரது அப்பா டிஆரின் ப்ரேயர் சாங் வேறு.  இரவு பணிரெண்டு மணிக்கு லைட் போடுவது, மெழுகுவர்த்தி ஏந்த்துவது, மொபைல் டார்ச் புரட்சி வரிசையில் இது சிம்புவின் ஒரு புதுவகையான கண்டுபிடிப்பு. தமிழகம் இதையெல்லாம் காணவேண்டிய கொடுமையிருக்கிறதே, பாவமய்யா நம் மக்கள்.

கருப்புக்கொடியும் கருஞ்சட்டை படையும்.
நம்மூரில் கருப்பு எதை குறிக்கிற நிறம் என யருக்கும் புதிதாக போய் சொல்லிக்கொடுக்க வேண்டாம். இயற்கையாகவே அவரவருக்கு புரிதல் உண்டு. ஆதிக்கத்துக்கு எதிரான நிறம் அது. உலகமெலாம் கருப்புக்கொடி ஏந்தி, கருஞ்சட்டை, கருப்பு பட்டை அணிந்து போராட்டங்கள் நடந்திருந்தாலும் இந்தியாவில், அதுவும் நம் தமிழகத்தில் அமங்களமான கருப்பை எதிர்ப்பின் நிறமாக மிகப் பிரபலப்படுத்தியது தந்தை பெரியார் அவர்கள் தான். அவர் இயக்கக் கொடியே பெரும்பாண்மையாக கருப்புதானே? எண்ணற்ற போராட்டங்களை அவர் கருப்புகொடி காட்டி நடத்திக் காட்டியிருக்கிறார்.

கலைஞர் அவர்கள் பெரியாரை பற்றி குறிப்பிடுகையில் .ரா சொன்னதை நினைவுபடுத்தி பெரியார் நாத்திகரா? இல்லையில்லை. அவர் இயற்கையின் புதல்வர். இந்த மண்ணை மனந்த மனாளன். எதிர்கால தமிழகத்து பெருமைக்கு தூதர்என சொல்வார்.

இந்த போராட்டத்தில் பெரியாரையா பின்பற்றியது தமிழகம் என்றால் ஆமாம் ஆனால் இல்லை எனலாம். மரம் செடி கொடி, காய், தண்ணீர் என இயற்கையின் அத்துனை செல்வங்களையும் நாம் அனுபவித்து கொண்டுதான் உள்ளோம். இயற்கையிடம் இருந்து அவ்வளவையும் நாம் பெற்றாலும் இயற்கையை நாம் வணங்குவதில்லை. நன்றி பாராட்டுவதில்லை. கலைஞர் அவர்களின் கூற்றின் படி பெரியார் இயற்கையின் புதல்வர். அவர் தன்முனைப்பாக ஒவ்வொருவர் நெஞ்சிலும் பதிந்து விட்டார். அவரை தொழுது வணங்கி அவர் பெருமை பேச வேண்டியதில்லை. அவரை பின்பற்றுவதென்பதுதான் முக்கியம். தமிழகம் தன் எதிர்ப்பை எவ்வாறு பதிவு செய்தது என்பதிலிருந்து நாம் அதனை அறிந்து கொள்ளலாம். ஆதிக்கத்திற்கு எதிராக, அறப்போர், சொற்போர், வலைப்போர் புரிந்து அடித்து விரட்டியது மோடியை. பயந்து பதுங்கி போன இந்திய பிரதமரை நாம் இப்போதுதான் கண்டுற்றோம்.

இதற்கு முன் கருப்புகொடி போராட்டங்கள் பிரதமரை எதிர்த்து பலமுறை நடந்துள்ளது. ஏன்? பிரிட்டிஷ் ஆட்சியிலேயே கருப்புக்கொடி போராட்டம் நடந்துள்ளது. இரட்டை ஆட்சிமுறை சம்பந்தமாக அமைக்கப்பட்ட சைமன் கமிசனை எதிர்த்து ”#சைமனே_திரும்பிப்_போஎன காந்தியார் அறிவுறுத்தி பெரும்போராட்டம் காங்கிரசால் முன்னெடுக்கப்பட்டது. சைமன் குழு சாலையெங்கும் கருப்புக்கொடியை எதிர்கொண்டது. பின்னர் சுதந்திரத்திற்கு பிறகு பிரதமர் நேருவின் இந்தித் திணிப்பு அறிவிப்பை எதிர்த்து இராஜாஜி தமிழகம் வந்தபோது பெரியார் தலைமையில் கருப்புக்கொடி அவரை வரவேற்றது. ”வேவு_பார்க்க_வரும்_இராஜியே_திரும்பிப்_போஎன்றது திராவிடர் கழகம்.

அதன் பின் பெரியார் வழிவந்த அண்ணா தலைமையிலான திமுக மத்திய அரசுக்கு எதிராக பலமுறை கருப்புக்கொடி எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறது.  முதன் முதலில் ஒரு பிரதமருக்கு எதிராக நேருவுக்கு திமுக கருப்புகொடி காட்டியது குறிப்பிடத்தக்கது. நிதானமான தலைவரான நேரு கொஞ்சம் காட்டமாகவே அப்போது பெரியாரை விமர்சித்திருந்தார். அதை எதிர்த்து திமுக பெருமளவில் கொந்தளித்தது. 1958ல் தடையுத்தரவையும் மீறி நேருவுக்கு கருப்புக்கொடி காட்டினர் திமுகவினர். வரலாற்றில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய போராட்டம் அது.

கவர்னர் ஜெனரல், குடியரசு தலைவர், மத்திய அமைச்சர்கள், பிரதமர்கள் என கருப்புக்கொடி காட்டி தங்கள் கோரிக்கையை வலியுறுத்துவது, அரசின் கொள்கைக்கு எதிராக எதிர்ப்பை பதிவு செய்வது இங்கு வழக்கமாகி போனது.

காங்கிரசும் கருப்புக்கொடி காட்டியது. முன்னர் தாங்கள் அனுபவித்த கருப்பு வெம்மைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆட்சி அதிகாரத்தில் இல்லாத கலைஞருக்கு எதிராக அவர் செல்லுமிடமெல்லாம் காங்கிரஸ் ஒருமுறை கருப்பு கொடி காட்டியது சுவாரசியமானது. அதுவும் இந்திரா காங்கிரஸ் மட்டுமே அதில் பங்குகொண்டது கூடுதல் சுவாரசியம். அதுபோலவே 1977ல் இந்திரா காந்திக்கு எதிராக அவர் நெருக்கடி நிலையை கைகொண்ட விதத்தை எதிர்த்தும், தங்களுக்கு ஏற்பட்ட கொடுமைக்கு பதில் சொல்லும் விதமாகவும் கருப்பு கொடி காட்டியது திமுக. மதுரையில் அது வன்முறையாகவும் வெடித்தது. இந்திராகாந்தி அவர்களுக்கு தலையில் காயம் ஏற்படும் அளவுக்கு அந்த போராட்டம் கடுமை கண்டது. திமுக தலைவர்கள் மீது பல வழக்குகள் பதிவானது. அதற்கு பிறகு மிகப்பெரிய அளவிலான கருப்புக்கொடி போராட்டங்கள் ஏதும் தமிழகத்தில் நடைபெறவில்லை எனலாம்.

நீண்ட காலத்திற்கு பிறகு தற்போது ஏப்ரல் 12ம் தேதி நடைபெற்ற கருப்பு கொடி போராட்டம்தான் மிகவும் முக்கியத்துவம் பெற்றுவிட்டது. வலைதளங்களில் உலக அளவில் ட்ரெண்டிங் ஆனது #திரும்பி_போ_மோடி. ஆனாலும் எந்த ஒரு பிரதமரும், குடியரசு தலைவரும் கருப்புக்கொடி காட்டுவதை எதிர்கொள்ளாமல் பயந்து ஒதுங்கியதில்லை. மக்களின் எதிர்ப்பை துணிச்சலாக எதிர்கொண்டனர். வரலாற்றில் மோடி ஒருவர் மட்டுமே பயந்து, ஒளிந்து சந்துக்குள் சாலை அமைத்து தமிழகம் வந்து போனார்.

பிரமருக்கு எதிரான போராட்டம் நியாயமானதா?
திமுக தலைமையிலான பல கட்சிகள் இணைந்து முன்னெடுத்த போராட்டமென்பது சிலருக்கு மிகவும் மொக்கையாக, சுவாரசியமற்றதாக தெரிந்திருக்கலாம். ஆனால் அதை நடத்துகிற கட்சிகள் அனைத்தும் மொக்கையான கட்சிகள் அல்ல. வலிமை பொருந்திய, அடிப்படை கட்டமைப்பு பொருந்திய அமைப்புகள். பல போராட்ட களங்களை கண்ட அமைப்புகள். புதுப்புது யுக்திகள் மூலம் போராட்டங்கள் நடத்திய இயக்கங்கள். காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, முஸ்லிம் லீக், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு என ஒவ்வொரு இயக்கத்தையும் தனித்தனியாக நாம் குறிக்கிற போதே அவ்வியக்கங்களின் போராட்டங்களும், தியாகங்களும் நம் கண் முன்னே விரியும்.

இன்றைக்கு நடைமுறையில் உள்ள மக்களுக்கான பல சட்டங்கள், அரசு திட்டங்கள் அனைத்தும் இந்த இயக்கங்களின் போராட்டங்களினாலும், உழைப்பினாலும் நமக்கு கிடைத்தவை என்பதை மறுப்பதற்கு இயலாது. ஆக சேர்ந்து கருத்தாலும் கொள்கையாலும் மாறுபட்டாலும் அனைவரும் ஒன்று கூடி பிரச்சனையின் அடிப்படையில் மக்களுக்காக, மாநில உரிமைக்காக ஒன்று கூடி தேர் இழுப்பது என்பது ஜனநாயக அமைப்பில் உன்னதமான வழிமுறையாகும்.

மக்களிடம் செல், அவர்களோடு வாழ், அவர்களிடமிருந்து கற்றுக்கொள், அவர்கள் தருவதை பெற்றுக்கொள், அவர்களை மேம்படுத்து.” என அண்ணா சொன்னதை போல மக்களை போய் நேரில் சந்தித்து, அவர்களை ஒருங்கிணைத்து போராட்டத்தை வலிமையாக்கியுள்ளது ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக்கட்சி தலைவர்களின் காவிரி மீட்பு பயணம்.

காவிரி மீட்பு பயணம் என்பது பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா பகுதி மக்களை நேரில் சந்தித்து, பிரச்சனையின் தீவிரத்தை உணரச்செய்து, அவர்களது ஆதரவை பெற்று போராட்டத்திற்கு வலிமை சேர்க்கும் யுக்தியாகும். மக்களை இணைக்காது மக்கள் போராட்டம் சாத்தியமில்லை என்பதை உணர்ந்த இயக்கங்கள் இவை. இந்த பயணப்போராட்டத்தில் உள்ள எந்த கட்சித் தலைவரும் மக்களை திட்டவில்லை. அவர்களோடு பயணிக்காத மக்களை வசைபாடவில்லை. உடன்படாத இளைஞர்களை அடிக்கவில்லை. அவர்களுக்கு சரியென பட்டதை காவிரி மீட்பு பயணமென முன்னெடுக்க, ஒத்துழைத்த மக்களை இணைத்துகொண்டு இன்னும் முன்னேறினர்.

வேலை நிறுத்த போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்று இறுதியாக தமிழகம் வரும் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டுவது என கூட்டாக முடிவெடுக்கப்பட்டது. திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் யாரையும் நிராகரிக்கவில்லை. அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அனைத்து கட்சிகள், அமைப்புகள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் பெருமளவில் பங்கு கொண்டனர். யாரையும் கட்டாயப்படுத்தாமல் அனைவரும் தன்னெழுச்சியாக கலந்து கொண்டதை அனைவரும் கண்டோம். சாலையில் அரசியல் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி வந்தனர் என்றால்; வீதியில் கருப்புச்சட்டை அணிந்து சாமானிய மக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். வீடுகளில் கருப்புக்கொடி கட்டியிருந்த காட்சிகள் நிறைந்திருந்தது. சமூக ஊடகங்கள் முழுதும் கருப்பாக நிறம் மறியிருந்தது.

நெஞ்சுரம் 56இன்ச் கொண்ட மோடி திணறிப்போனார். மோடியை கண்டால் பாகிஸ்தான் பதறுகிறது, சீனா சிதறுகிறது என்றெல்லாம் இட்டுக்கட்டிய காலம் போய் வெறும் கருப்பை கண்டு கதறினார் மோடி. இல்லாவிட்டால் சாலையில் செல்லாமல் ஆகாயத்திலா செல்வார். அவர் பதுங்கியது தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி. இன்றுவரை அவர் தமிழக பயணம் குறித்து பேசவே இல்லை. இன்னும் இன்னிலை நீடித்து இன்னொருமுறை அவர் தமிழகத்திற்கு வருவதாக இருந்தால் பூமிக்குள் புதைந்தோ? அல்லது கடல் மார்க்கமாகத்தான் வரவேண்டியிருக்கும். ஏனெனில் ஹெலிகாப்டரை தொடும் தூரத்திற்கு பலூனை அனுப்பி அவரை படுத்திவிட்டது தமிழகம்.

மோடியை கூட கர்நாடக தேர்தல் பிடித்து ஆட்டுகிறது. விடுங்கள். இந்த தமிழகத்து பாஜக பெருந்தலைவர்கள் இன்னும் கூட சுரணையற்று கிடக்கிறார்கள். எருமை மேய்ப்பவனுக்கு அவன் பெருமையே பிரதானம் என்பதுபோல எச்.ராஜா சொல்கிறார் இப்போதும் டிவிட்டர் ட்ரெண்டிங்கில் மோடிதான் நம்பர் ஒண்ணாம். அவர் பண்பாட்டில் கருப்பு மங்களகரமானதாம் எனவே மோடியை கருப்பு ஒன்றும் செய்யாதாம்.

அவர் பாணியிலேயே அவரிடம் சொல்லிக்கொள்வோம். சனிபகவானுக்கு உகந்த நிறம் கருப்பு. சனி உச்சத்தில் இருந்தாலே கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும். தமிழகத்து கருப்பு இப்போது உக்கிரத்தில் இருக்கிறது. மாநில உரிமைகளுக்கு எதிராக தொடர்ந்து மத்திய அரசு நடந்து கொண்டிருந்தால் அது ஜென்மச்சனியாக மாறுவிடுவதற்கான சூழ்நிலை உருவாகும்.

விரைவில் காவிரி மேலாண்மை அமைக்கவேண்டியது அவர்களது கடமை மட்டுமல்ல காலத்தின் கட்டாயம்.

http://poombuhar.com/?p=459